உள்ளூர் செய்திகள்

மகிழ்வு தரும் கனிவு!

நவ., 13 - உலக கனிவு தினம்அன்பின் மற்றொரு வெளிப்பாடு கனிவு. பிறருக்கு உதவுதல், சேவை செய்தல் என, நீங்கள் செலவிடும் ஒவ்வொரு நிமிடமும், உங்களுக்கு மகிழ்ச்சி தருவதுடன், ஆயுளையும் மேம்படுத்துகிறது என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.'கனிவுடன் நீங்கள் மற்றவர்களுக்கு ஏதேனும் உதவும் போது, உங்கள் மூளையில், 'டோபோமைன்' என்ற திரவம் சுரக்கிறது. இது, ரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தி மனதை இயல்பாக வைத்திருக்க செய்கிறது. இதனால், உங்கள் இளமை நீட்டிக்கப்படுகிறது. 'மேலும், ரத்தத்தில் குளுக்கோஸ் அதிகரிக்கும் ஆபத்தும், இதய அழற்சி பாதிப்புகளும் குறையும்...' என்கிறார், டாக்டர் டேவிட் ஆர் ஹாமில்டன். இவர், 'தி 5 சைடு எபெக்ட் ஆப் கைண்ட்னஸ்' என்ற புத்தகத்தை எழுதியவர்.பொதுநல சேவையில் ஈடுபடுவதால் இளம் வயதில் மரணமடையும் வாய்ப்பு, 32 சதவீதம் குறைகிறது. மேலும், 38 சதவீதம் மருத்துவமனைக்கு செல்வதையும் தவிர்க்கும் என்கின்றனர், இண்டியானா பல்கலைக்கழக உளவியல் ஆராய்ச்சியாளர்கள். கனிவுடன் செயல்படுகிறவர்களுக்கு அழற்சி தொடர்பான மரபணு செயல்பாடு குறைவாக இருப்பது, ஆய்வில் தெரிய வந்தது. இதனால், புற்றுநோய், இதய நோய், நீரிழிவு நோய் மற்றும் மூட்டு நோய்கள் ஏற்படும் அபாயம் குறைவதாக கூறுகின்றனர்.பிறருக்கு நீங்கள் கனிவுடன் உதவும் போது, மூளையின் செயல்பாடு மற்றும் காது கேட்கும் திறன் அதிகரிக்கிறது. நல்ல துாக்கம் மற்றும் ரத்த அழுத்தம் குறைவு போன்ற நல்ல பலன்கள் கிடைக்கிறது. நீங்கள் கனிவுடன் நடந்து கொள்வதால், அது, உங்கள் ஒவ்வொரு செல்களிலும் பதிவாகிறது. உங்களின் மரபணுக்களை கூட மாற்றும் ஆற்றல் உடையது என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.எப்போதாவது கனிவுடன் நடந்து கொண்டாலும் இதே பலன்கள் கிடைப்பதாகவும் கூறுகின்றனர், ஆராய்ச்சியாளர்கள். நீங்கள் சந்திக்கும் அனைவருக்கும், முடிந்த மட்டும் வணக்கம் தெரிவியுங்கள். தாகமாக இருப்பவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள். வயதானவர்களுக்கும், முடியாதவர்களுக்கும் படிகள் ஏறி வர, பஸ் மற்றும் கார்களில் ஏறவும், இறங்கி வரவும் உதவுங்கள்.வாழ்வில் நிம்மதியை தொலைத்தவர்களுக்கு ஆறுதலான வார்த்தைகளை கூறுங்கள். ஒருவர் தன்னிலை விளக்கம் கொடுத்து பேசும் போது, குறுக்கே போதீர்கள்; அவர் கூறுவதை கவனமாக முழுமையாக கேளுங்கள். நீங்கள் தவறு செய்யும்போது தயங்காமல் மன்னிப்பு கேளுங்கள். முடிந்தளவு மற்றவர்களை பாராட்டி மகிழுங்கள். பிறருக்கு கடிதம் எழுதும் போதும், பிறரிடம் பேசும் போதும், கோபமான வார்த்தைகளை உபயோகிக்காதீர்கள். உங்களை சுற்றி உள்ளவர்கள், புரளி பேசினாலும், நீங்கள் அமைதியாக இருங்கள். மற்றவர்களை மன்னிக்க கற்றுக் கொள்ளுங்கள். எந்தவொரு பிரச்னையும் மறுபடியும் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.கனிவு ஒரு போதை. இதனால், 'ஹேங் ஓவர்' ஆவதில்லை. ஆனால், அது உங்கள் இதயத்திற்கு இதமளித்து, உங்களை இளமையாக வைத்திருக்க உதவுகிறது. மேலும், அன்றாட வாழ்வில் கனிவுடன் நடக்க சில நிமிடங்கள் ஒதுக்குங்கள் என்கின்றனர், ஆராய்ச்சியாளர்கள்.தொகுப்பு: கோவீ.ராஜேந்திரன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !