நம்மிடமே இருக்கு மருந்து! - தும்பை!
செடியினத்தை சேர்ந்தது, தும்பை. நன்கு செழிப்பாக வளர்ந்த செடி, 1 அடி உயரம் இருக்கும். மழைக் காலத்தில் எங்கும் செழித்து வளரும். தும்பை பூ, மல்லிகை பூவை விட வெண்மையாக இருக்கும். மழைக்காலம் முடியும் தருவாயில், செழித்து வளர்ந்து பூத்திருக்கும்.மருத்துவத்திற்கு பயன்படும் மூலிகைகளில் தும்பைக்கு தனி இடம் உண்டு. தும்பை பூவிற்கு, 'பாத மலர்' என்ற பெயரும் உண்டு.பச்சைப் பசேல் நிறத்தில், கத்தி போல் நாலாபுறமும் நீட்டிக் கொண்டிருக்கும் இதன் இலைகள். தேன் நிறைந்த, நாக்கு வடிவ மலர்களுடன், தும்பை செடியை அனைவரும் அடையாளம் கண்டு கொள்ளலாம்.தும்பை முழு தாவரமும், இனிப்பு, காரச் சுவை மற்றும் வெப்பத் தன்மையும் கொண்டது. விஷ பூச்சிகள், விஷ ஜந்துக்கள் கடித்தாலும், தும்பை பூவும், இலையும் அதன் விஷத்தை முறித்து விடும்.* தும்பை பூ மற்றும் அதன் இலைகளை சம அளவு எடுத்து சுத்தம் செய்து, அம்மியில் அரைத்து சாறு எடுத்து, வடிகட்டி, கால் அவுன்ஸ் குடிக்க வேண்டும். அதே பூவையும், இலையையும் அரைத்து, பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போட்டால், விஷம் முறிந்து விடும்* தும்பை பூவை, 50 கிராம் அளவில் சேர்த்து, இரண்டு ஆழாக்கு நல்லெண்ணையில் போட்டு தைலமாக காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், ஒற்றைத் தலைவலி, தலை பாரம், தலை நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன நீங்கும்* உலர்ந்த தும்பை பூ - 50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்துாரி மஞ்சள், ஓமம், பூண்டு மற்றும் சித்தரத்தை தலா, 10 கிராம் எடுத்து, நன்றாக இடித்து, கால் லிட்டர் நல்லெண்ணையில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மூக்கடைப்பின்போது, இந்த எண்ணெயில், இரண்டு துளிகள் விட்டால் நீங்கும். மூக்கில் சதை வளர்ந்திருந்தாலும் மறையும்* தலைவலி, தலை பாரம் குணமாக, சிறிதளவு தும்பை பூவை சேகரித்து, பசும்பால் விட்டு அரைத்து ஒரு துணியில் தடவி, அதை நெற்றிப் பொட்டின் மீது வைத்தால், தலைவலி குணமாகும். நெற்றியிலும் துணியை போட்டு வைத்தால், தலை பாரம் இறங்கும்* பாம்பு கடித்து, தலைக்கு ஏறி மயங்கி விழுந்து விட்டாலும், தும்பை இலைச் சாற்றை எடுத்து மூக்கில் விட்டு ஊதினால், சில நிமிடங்களில் மயக்கம் தெளியும்.தும்பை பூவையும், இலையையும் சம அளவு எடுத்து, இடித்து சாறு எடுத்து ஒரு அவுன்ஸ் சாற்றை உள்ளுக்கு கொடுத்து விட, சிறிது நேரத்தில் வாந்தி, பேதி ஆகும். அச்சப்படத் தேவையில்லை.சிறிது நேரத்தில் உடலில் சூடு உண்டாகும். உடலில் சூடு ஏறிவிட்டாலே, விஷம் முறிந்து விட்டதை அறிந்து கொள்ளலாம். சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்து கண்களை திறந்து விடுவர்.இச்சமயத்தில் பசி எடுக்கும். பச்சைப் பருப்பையும், பச்சரிசியையும் சம அளவு சேர்த்து சமைத்து, சாப்பிட கொடுக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு, உப்பு, காரம், புளிப்பு, நல்லெண்ணை மற்றும் கடலை எண்ணெய் சேர்க்கக் கூடாது* தேவையான அளவு தும்பை பூவையும், இலையையும் சேகரித்து, சிரங்கு, உடலில் அரிப்பு இருந்தால், உடல் முழுதும் பூசி, ஒரு மணி நேரம் ஊற விட வேண்டும். பிறகு, சீயக்காய், மஞ்சளை அரைத்து தேய்த்து குளித்து வந்தால் குணமாகும்* சிறிதளவு தும்பை பூக்களை பறித்து நன்கு அலசி வெறும் வாயில் மென்று தின்றால், இருமல், சளி தொல்லை உடனடியாக நீங்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பெருகும்* சிறிதளவு தும்பை பூக்களை எடுத்து, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைத்து சாறை வடிகட்டி, அதனுடன் சிறிதளவு மிளகுத்துாள், பனங்கற்கண்டு கலந்து குடித்தால், கடுமையான நீர்க்கோர்வை நீங்கும்* சிறிதளவு தும்பைப் பூ, தேன், மிளகுத்துாள் சேர்த்து இரு நாட்களுக்கு காலையும், மாலையும் சாப்பிட, அடுக்குத் தும்மல், தொண்டைக்கட்டு நீங்கும்* தும்பைப் பூ, ஏலக்காய், அக்கரகாரம் (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை தேனில் குழைத்து, சிறிது சிறிதாக வாயில் போட்டு வைத்திருந்தால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு நீங்கும்* காய்ச்சிய பாலில், 25 தும்பை பூக்களை ஒரு மணி நேரம் ஊற வைத்து, குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்தால், அவர்களின் தொண்டைப் பிரச்னை நீங்கும்* கைப்பிடி அளவு தும்பைப் பூவுடன், மிளகு - 10, தேங்காய் துருவல் - 100 கிராம், இரண்டு பச்சை மிளகாய் அனைத்தையும், சிறிதளவு நெய் விட்டு வதக்கி அரைத்து, தினமும் ஒருவேளை துவையலாக சாப்பிட்டு வந்தால், மார்பிலுள்ள கபம் கரைந்து வெளியேறும். ஆஸ்துமா நோயும் கட்டுப்படும்.* பீனிசம் ஏற்பட்டு மூக்கில் ரத்தம் வந்து கொண்டே இருந்தால், தும்பை பூவையும், அதன் இலையையும் சம அளவு எடுத்து, கசக்கி சாறு எடுத்து, இரண்டு துளி வீதம் காலை, மாலையில் மூக்கில் விட்டு வந்தால் குணமாகும்தொகுப்பு: பொ.பாலாஜி கணேஷ்