அன்புடன் அந்தரங்கம்!
அன்பு சகோதரிக்கு —வயது: 51, மனைவியின் வயது: 47. எனக்கு இரு மகன்கள். வெளியூரில் தங்கி படிக்கின்றனர். நான், தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிகிறேன். சொந்த வீடு உள்ளது. யாரிடமும் கடன் வாங்காமல், போதிய நிதி வசதியுடன் கவுரவமாக வாழ்ந்து வருகிறேன்.இல்லத்தரசியான, மனைவியின் ஆடம்பர செலவுகள் தான், என்னை கடனாளியாக மாற்றி விடுமோ என்று பயப்படுகிறேன்.எனக்கு ஒரு தங்கை. வசதியான இடத்தில் திருமணம் செய்து கொடுத்து, வளமையாக வாழ்கிறாள். அதேபோல், மனைவிக்கும் ஒரு தங்கை, வசதியாக வாழ்கிறாள். அவர்களை பார்த்து, தானும் அதுபோல் ஆடம்பரமாக வாழ ஆசைப்படுகிறாள்.தேவைக்கு மட்டும் வாங்கினால் போதும் என்றால், கேட்க மாட்டாள். அவர்கள் ஏதாவது புதிதாக பட்டுப் புடவையோ, நகையோ வாங்கினால், உடனே இவளும் அதேபோல் வாங்க முற்படுகிறாள். கையிருப்பில் பணம் இல்லாவிட்டாலும், வட்டிக்கு கடன் வாங்கி, உடனே வாங்கி அணிந்து கொண்டால் தான் அவளுக்கு நிம்மதி.பலமுறை எடுத்து சொல்லியும் கேட்பதில்லை. மீறி ஏதாவது கடுமையாக பேசினால், 'ஒண்ணுமில்லாதவனை கட்டிக்கிட்டது என் தப்புதான்...' என்று கூறி, என்னை மட்டம் தட்டுகிறாள்.மகன்களின் மேற்படிப்புக்காக சிறுக சிறுக பணம் சேமித்து வருகிறேன். அதற்கும் வேட்டு வைத்து விடுவாள் போலுள்ளது.இந்த சிக்கலிலிருந்து அவளை மீட்க, வழி சொல்லுங்கள் சகோதரி.— இப்படிக்கு,உங்கள் சகோதரன்.அன்பு சகோதரருக்கு —இல்லத்தரசிகள், 20 சதவீதம் மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள், 50 சதவீதம் பேர், ஆடம்பரமாய் செலவு செய்வர். ஆடம்பரம், ஒரு தொற்று நோய். ஆடம்பரமும், பொறாமையும் இரட்டைப் பிறவிகள்.ஆடம்பரம் என்ற ஒற்றைப் புள்ளியில் வழி தவறுவோரின் வாழ்க்கை, சர்வநாசத்தில் முடியும். குடும்பத் தலைவன் அல்லது இல்லத்தரசியின் ஆடம்பரம், குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் வறுமைக் கடலில் மூழ்கடித்து விடும்.நீ, உன் மனைவி மற்றும் இரு மகன்களுடன், ஏதாவது ஒருநாள் ஒன்று சேர்ந்து, ஹோட்டலுக்கு செல்லுங்கள். குற்றவாளியின் மீது குற்றப்பத்திரிகை வாசிக்கும்படி இல்லாமல், 'ஸ்கேன் ரிப்போர்ட்' பார்த்து மருத்துவர், மருத்துவ ஆலோசனை வழங்குவது போல், வெகு சாமர்த்தியமாக பேச வேண்டும்.'நான் சொல்வதை கவனமாக கேளுங்கள்... என் தங்கையையும், தன் தங்கையையும் பார்த்து, உங்கள் அம்மா சூடு போட்டுக் கொள்கிறாள். கழுகு பறக்கும் வானம் வேறு. சிட்டுக்குருவி பறக்கும் கீழ் வானம் வேறு.'சிட்டுக்குருவி, தன் இறக்கைகளின் திறனுக்கேற்ப பறந்தால் போதுமானது. இறைவன் சிலருக்கு கொடுத்து சோதிக்கிறான். அதே இறைவன் சிலருக்கு கொடுக்காமல் ஆசீர்வதிக்கிறான். திருப்தி மனோபாவம் கொண்டவன், உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரன்.'மகன்களே... உங்கள் கல்விச் செலவுக்காக சிறுக சிறுக பணம் சேமித்து வருகிறேன். அதை உங்கம்மா கபளீகரம் பண்ணி விடுவாளோ என்று பயப்படுகிறேன். ஆடம்பரத்தை தவிர்க்க, அம்மாவுக்கு எடுத்து சொல்லுங்கள். கணவனின் அறிவுரையை விட மகன்களின் அறிவுரை, உங்கள் அம்மாவின் காதுகளில் தங்கும்.'ஆண்டிற்கு இருமுறை புத்தாடை எடுத்தால் போதும். கம்மல், செயின், வளையல், மோதிரம் என, 10 சவரனில் ஒரு பெண் நகை அணிந்தால் போதுமானது. மீதி நகைகளை வங்கி லாக்கரில் வைத்து பூட்டப் போகிறேன்.'மாதம் ஒரு தொகை கொடுப்பேன். அதற்குள் உங்கள் அம்மா குடும்பம் நடத்த வேண்டும். தினசரி இரவு, வீட்டின் வரவு - செலவு கணக்கை எழுத வேண்டும். வீட்டின் உபரி செலவு, 6,000 ரூபாய் என் கையில் இருக்கும்.'மகன்கள் இருவருக்கும் தலா, 2,000 ரூபாய், மாத பாக்கெட் மணி. மீதி என் சம்பளத்தை நான்காக பிரித்து வங்கி வைப்பில், தனித்தனி கணக்குகளில் போடப் போகிறேன்.'அம்மா, என்னை ஒண்ணுமில்லாதவன் என்கிறாள். என்னிடம் ஆடம்பரம் இல்லை, அதிருப்தி இல்லை, பொறாமை இல்லை. பதிலாக நான் பண நிர்வாகம் தெரிந்த மத்திய தரத்தை சேர்ந்தவன். 'கடன் வாங்கி செலவு செய்தவனும் மரமேறி கைவிட்டவனும் சரி' என்கிறது ஒரு பழமொழி. 'வருவாய் எவ்வளவு தான் சிறிதாக இருந்தாலும், செலவு அதை மிஞ்சி விடாமல் கட்டுக்குள் வைத்தால், இழப்புகளை தவிர்க்கலாம்...' என, மனைவி, மகன்களுடன் தெளிவாக பேசி, உறுதி மொழி எடு.தொடர்ந்து அம்மாவை, மகன்கள் கண்காணித்துக் கொள்வர். ஆபரேஷன் சக்சஸ்!— என்றென்றும் பாசத்துடன், சகுந்தலா கோபிநாத்.