உள்ளூர் செய்திகள்

உறவுப் பாலம்!

'ஓட்டமாய் ஓடுவது தான், இன்றைய வாழ்க்கை முறையா...' என்று ஜகதீஷ் கேட்டது, அருணுக்கு மறுபடி நினைவுக்கு வந்தது.'எல்லாரும் தான் வெற்றியை நோக்கி ஓடுகிறோம்; எல்லா பாடத்திலும் நூற்றுக்கு நூறு, ஆசைப்பட்ட தொழிற்கல்வி, வேலை, காதல், வீடு, கல்யாணம் என்று, ஏதோ ஒன்று நம்மை ஓட வைக்கிறது. ஆனால், அந்த ஓட்டத்தை நேர்மையாக, ரசனைக்குரியதாக நம்மால் மாற்றிக் கொள்ள முடியும். முடிந்தவரை பொய் சொல்லாமல், நல்லெண்ணங்களுடன், பெருந்தன்மையுடன் இருப்பது என்று, நம்மை நாமே மதிப்புடன் வைத்துக் கொள்ள முடியும்...' என்ற போது, ஜகதீஷ் நம்பவில்லை.இன்று அவனே தேடி வந்தான்.''அருண்... நிஜமாகவே நீ கிரேட் தான்...'' என்றான் புருவம் உயர்த்தி!''என்னப்பா திடீர் கண்டுபிடிப்பு...'' என்று சிரித்தான் அருண்.''நம் கம்பெனியோட டிரஸ்ட் வேலைகளை நீ தான் பாக்குறே...தினந்தினம் உதவி கேட்டு, எவ்வளவோ, மனுக்கள் வருது. அதுல நீ செலக்ட் செய்து சிபாரிசு செய்கிறவங்களுக்குத் தான், கம்பெனி கண்ணை மூடிக்கிட்டு, 'செக்' கொடுக்குது,'' என்றான்.''இப்ப என்ன சொல்ல வர்றே...'' என்று கேட்டு, மறுபடியும் சிரித்தான் அருண்.''அட.... ஒரு விஷயம் தெரிய வந்ததுப்பா... போன வாரம் ரெண்டு இளம் பெண்கள், சுயதொழில் செய்ற ஆர்வத்துல உதவி கேட்டு வந்திருக்காங்க. ஒருத்தி ரொம்ப அழகா, ஸ்மார்ட்டா இருந்தா. இன்னொருத்தி அப்படி இல்ல; ரொம்ப குள்ளமா, அம்மைத் தழும்பு முகத்தோட சாதாரணமா இருந்தா. ரெண்டு பேரோட பிராஜக்ட்டும், 'பப்பாளி பார்மிங்' தான். அதனால, அழகான பெண்ணுக்குத் தான் அருண் சிபாரிசு செய்வார்ன்னு ஆபீஸ் முழுக்க பேச்சா இருந்தது...''''அட... நெஜமாவா... இதெல்லாம் எனக்கு தெரியாதுப்பா,'' என்று, ஆச்சரியபட்டான்.''ஆனா, நீ அந்த குள்ளமான பெண்ணுக்கு சிபாரிசு செஞ்சு, 'செக்' வாங்கிக் கொடுத்திருக்கே... அதனால, 'அழகுக்கு மயங்காத, அழகு வாலிபன் அருண்'ன்னு பேசிக்கிறாங்கப்பா,''என்றான்.''ஆபீஸ்ல இன்னும் வேற என்னெல்லாம் பேசுறாங்க,''என்றான்.''அதை அப்புறம் சொல்றேன்... ஏன் அந்த அழகான பெண்ணுக்கு சிபாரிசு செய்யல?'' என்று கேட்டான்.''இது ரொம்ப சிம்பிள்... அழகான பெண் செய்யப் போற, 'பப்பாளி பார்மிங்' அழகு கிரீம் தயாரிக்கறதுக்கு! குள்ளமான பெண்ணோ, பெண்கள் சம்பந்தப்பட்ட உடல் வலிகளுக்கான மருந்து தயாரிக்கும் பாரம்பரிய மருந்து கம்பெனிகளுக்கு விவசாயம் செய்ய! ஆவணங்கள் எல்லாம் தெளிவா இருந்தது. அழகை விட ஆரோக்கியம் தான் முக்கியம். அதனால, பப்பாளி மருந்துக்கே, சிபாரிசு செய்தேன்,'' என்றான்.வீட்டிற்குள் நுழைந்ததும், காத்திருந்தவர் போல் அப்பா, ''அருண்... உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்,''என்றார்.''என்னப்பா?''''உன் கல்யாண விஷயம் தாம்பா...''''தெரியுமே... சொல்லுங்க,'' என்று காலுறையை கழற்றியபடி முறுவலித்தான்.''இந்த முறை தரகரே பொறுமை இழந்துட்டார். '27 வயசு பையனுக்கு கல்யாணத்துக்கு வரன் பாக்கணும்... வாங்கன்னு கூப்பிட்டிங்க; வந்தேன். ஒரு ஆண்டு ஓடிப் போச்சு, இன்னும் நான் கொடுத்த வரன்களோட புகைப்படத்தைக் கூட பாக்கலே. இனி நான் வர மாட்டேன்; நீங்களே ஒரு முடிவுக்கு வந்த பின் கூப்பிடுங்க'ன்னு கோபமா சொல்லிட்டு போய்ட்டார். நீ ஏன் எந்த பதிலும் சொல்ல மாட்டேங்குறே... உன் மனசுல எந்தப் பெண்ணையாவது நெனச்சுக்கிட்டிருக்கியா?''என்று கேட்டார்.'அப்படியெல்லாம் இல்லப்பா. இந்த மாசத்துக்குள்ள கண்டிப்பா சொல்லிடறேன்,''என்றான்.அவர் ஏதோ முணுமுணுத்தபடி நகர்ந்ததும், அங்கே வந்த அம்மா, ''என்னப்பா... அப்பா என்ன சொல்லிட்டு போறார்,'' என்றாள்.''கல்யாண விஷயத்த... தள்ளிப் போடறேன்னு அப்பாவுக்கு கோபம்மா,''என்றான்.''நீ ஏன் கல்யாணத்த தள்ளிப் போடுறே... உன் கூட படிச்சவங்களுக்கு எல்லாம் குழந்தையே இருக்குது,'' என்றாள் அம்மா ஆற்றாமையுடன்!''சரிம்மா இனிமே தள்ளிப் போடற வேலையே இல்ல. நீ போய் எனக்கு சுக்குக் காபி கொண்டு வா,'' என்று அவளை அனுப்பி, குளியலறைக்கு சென்றான்.இரவு 7:00 மணி... மென்மையான காற்றும், தண்ணீரும் உடலின் வெம்மைக்கு இதமாக இருந்தது. சின்னக் கீற்றாக நிலவின் வருகை மனதை ஆசுவாசப்படுத்தியது.குளித்து முடித்து, சுக்குக் காபி பருக தயாரானபோது, அம்மா போனில் பேசிக் கொண்டிருப்பது கேட்டது.''என்ன சொல்றே கோகிலா... அப்படியா செய்றா உன் மருமக... மூணு மாசம் கூட ஆகலியே கல்யாணம் முடிஞ்சு... உன் வேலைய பாத்துட்டுப் போங்கன்னா சொல்றா... மூஞ்சில அடிக்கிற மாதிரி பேசுறாளா... அடடா நீ ரொம்ப சாதுவாச்சே...உன் மனசு தாங்காதே...''அவன் அம்மா பேசுவதை நிதானமாக கவனித்தான்.''அவங்க ரெண்டு பேருக்கு மட்டும் தான் சமைச்சுக்குவாளாமா? நீயும், உங்க வீட்டுக்காரரும் தனியா சமைச்சுக்கணும்ன்னு சொல்றாளா... உன் முகத்தைப் பாத்து பேசறதில்லையா... பாத்தாலும் கடுகடுன்னு வெச்சுக்கறாளா...''இதைக் கேட்ட போது, அவன் மனதில் கவலை சூழ்ந்தது.''கண்ணன் - ராதா பேர் பொருத்தம் ரொம்ப நல்லா இருக்குன்னு சொல்லிச் சொல்லி சந்தோஷப்பட்டியே...''அதற்கு மேல் கேட்க முடியாமல், அவன் பெருமூச்சு விட்டான். அம்மாவுக்கும், வரப் போகும் பெண்ணுக்கும் ஒத்துப் போவதை விட, ஒத்துப் போகாமல் இருப்பதற்குத் தான், ஆயிரம் காரணங்கள் உள்ளன. இரண்டு பேரும் எடுத்ததெற்கெல்லாம் கட்சி கட்டி நின்றால், அவன் நிலைமை என்னவாகும்? மனசுக்குள் இருக்கும் இந்த அச்சம் தான், அவனை திருமண பந்தத்தைத் தள்ளி வைக்கச் சொல்கிறதோ!மாக்ஸ்முல்லர் பவனில் நடக்க இருக்கிற புத்தக வெளியீட்டு விழாவுக்குக் கிளம்பிக் கொண்டிருந்தபோது, அம்மாவின் கணீர் குரல் சத்தமாகக் கேட்டது.''வாம்மா ராதா... வா வா... அட கல்யாணத்துல பாத்ததை விட, இன்னும் அழகா ஆயிட்டேயே...'' கோகிலாம்மாவின் மருமகள் ராதாவை அம்மா வரவேற்றுக் கொண்டிருந்தாள்.''என்னம்மா சாப்பிடற... பழங்கள் சாப்பிடுறீயா இல்ல சத்துபானம் தரட்டுமா,'' என்று அம்மாவின் குரலில் அன்பு ததும்பியது.''அதெல்லாம் வேணாம் ஆன்ட்டி... உங்க வீட்டை கடந்து போகும் போதெல்லாம் தோட்டத்துல ஒரு மரத்துல மஞ்சள் பூ கிளையெல்லாம் பூத்திருப்பதை பாப்பேன். விதை இருந்தா, எடுத்து வைங்க; இத சொல்லிட்டுப் போகலாம்ன்னு தான் வந்தேன்,''என்றாள்.''கட்டாயம் எடுத்து வெக்கிறேன்மா. நீ சாண்ட்விச் தோசை, குடை மிளகாய், பசலைக்கீரை போண்டான்னு, ரொம்ப ருசியா சமைக்கிறயாமே... கோகிலா சொன்னா. இப்படி புதுமையா சமைக்கிற பெண்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்,''என்றாள்.''ஓ தாங்க்ஸ் ஆன்ட்டி.''''உன் ரூம் அவ்வளவு அழகா, ஓவியங்கள், செடிகள்ன்னு இருக்காம்... நீ போடற உடைகள் கச்சிதமா, அம்சமா இருக்காம். கோகிலாகிட்ட சிரிச்ச முகமா இருக்கியாம்... அக்கறையா பேசறியாம், 'இப்படி ஒரு மருமக கிடைச்சது என் பாக்கியம்'ன்னு சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டா கோகிலா,''என்றாள்.அந்தப் பெண், முகத்தில் ஏதேதோ உணர்வுகள் நிழலாடி போயின.'' மாமியார், மருமகள்ன்னா எலியும், பூனையும் மாதிரின்னு சொல்வாங்க. அத, அம்மா - பெண் உறவு மாதிரி நினைக்கிற உன் மாதிரி இளம் பெண்கள நினைக்கும் போது சந்தோஷமா இருக்கு,'' என்று அவள் கை பற்றி சொன்னாள் அம்மா.''எனக்கும் ஏதோ புரியற மாதிரி இருக்கு ஆன்ட்டி... அத்தை கிட்ட இனிமே இங்கிதமா, அன்பா நடந்துக்கணும்ன்னு தோணுது. ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி,'' என்று தழுதழுத்த குரலில் சொல்லி அகன்றாள் ராதா.வியப்புடன் அம்மாவிடம் சென்ற அருண், ''என்னம்மா இது... அன்னிக்கு கோகிலாம்மாகிட்ட நீ பேசினத கேட்டேன். இந்த ராதா மீது ஒரே புகார் பட்டியல் வாசிச்சார் அவர் மாமியார். நீயும், 'என்கரேஜ்' செய்து பேசின. இப்ப என்னடான்னா இந்தப் பொண்ணுகிட்ட இப்படி அன்பைப் பொழியறே... என்னம்மா மேஜிக் இது...''என்றான்.அம்மா பொறுமையாக அவன் முகம் பார்த்து புன்னகையுடன், சொன்னாள்...''முடிஞ்ச வரைக்கும் நல்லதை மட்டும் பகிரலாம்ன்னு ஒரு எண்ணம்தாம்பா. எனக்கும் ஐம்பது வயசு ஆகுது; நல்லதை எப்படி உண்டாக்கலாம், கெட்டதை எப்படி குறைக்கலாம்ங்கிற அடிப்படை அறிவு இருக்காதா... கோகிலாவோட உடைஞ்ச மனசுக்கு வேண்டிய ஆறுதலை, அன்னிக்கு கொடுத்தேன். இன்னிக்கு, இந்தப் பெண்ணை தாராளமாவே பாராட்டி, மாமியார் மேல் மதிப்பை உண்டாக்கினேன். ''வீட்டுல தான் என்ன செய்கிறோம்ன்னு அந்தப் பெண்ணுக்கு தெரியும். அது எவ்வளவு தப்புங்கிறதும் இப்ப புரிஞ்சிருக்கும். பெண்கள் பேசறது வெறும் புரளி, வம்பு மட்டும் இல்லப்பா. பாலம் கட்டுற பணியும் அதுல இருக்கு,'' என்று சொல்லி நிறுத்தி, ''உன் வேலைல, கடமை தாண்டிய ஒரு சமுதாய உணர்வும் இருக்குன்னு, நீ அடிக்கடி சொல்லுவ... உன்னைப் பெத்த அம்மாவுக்கு, அதுல கொஞ்சமாவது இருக்க வேண்டாமா கண்ணா...'' என்றாள் கனிவுடன்!''ஓ.கே., மா.''''எதுக்கு?''''என் கல்யாணத்துக்கு,'' என்றான், அவன் மனநிறைவுடன்.உ.சிவரஞ்சனி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !