நான் வந்த பாதை! (26)
திரைப்பட நடிகர், மறைந்த, எஸ்.எஸ்.ராஜேந்திரன் எழுதிய சுய சரிதை!ஒரு படத்தின், 'கிளைமேக்ஸ்' காட்சியின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில், நான் கதாநாயகன். ஒரு திருமண காட்சி. துணை நடிகர் - நடிகையர் குழுமி இருந்தனர். அவர்களை அழைத்து வர, போக, கம்பெனி கார்களுடன் வாடகை கார்களையும் எடுத்துக் கொள்வர்.படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. கேமராவில் பிலிம் குறைந்து வந்ததால், புதிய படச்சுருள் வாங்கி வர, ஒரு வாடகை காரில், அங்கு பணிபுரியும் ஒருவரை அனுப்பி வைத்தனர். கேமராவில் இருந்த படச்சுருள் தீர்ந்து விட்டது. மேற்கொண்டு புதிய படச்சுருள் வாங்க போன கார், வெகுநேரம் ஆகியும் வராததால், படப்பிடிப்பு நடத்தாமல் காத்திருந்தனர்.மறுபடியும், வேறு ஒரு காரை அனுப்பியதில், படச்சுருள் வாங்கப் போன கார், வரும் வழியில் பஞ்சராகி நின்றதால், அந்த காரிலிருந்த படச்சுருளை வாங்கி வந்தனர். அதனால், படப்பிடிப்பு தொடர வெகு நேரமாகியது.டயர் வெடித்த கார் டிரைவரை அழைத்து கண்டித்து, 'இனி அந்த கார் வேண்டாம்...' என்று கூறி, அதுவரை ஓட்டியதற்கான கூலியை கொடுத்து, நிறுத்தி விட்டனர்.நானும், அந்த டிரைவர் மீது கடும் கோபத்தில் தான் இருந்தேன். மதியம், மணி, 1:00 ஆகி விட்டது. பகல் உணவுக்காக, படப்பிடிப்பை முடித்து, 'செட்'டை விட்டு வெளியே வந்தேன்.பழுதடைந்து நிறுத்தப்பட்ட அந்த கார் டிரைவர், என்னை பார்த்தவுடன், விம்மி விம்மி அழுதான்.'ஏய் எதுக்காக அழுகிற, போய்யா...' என சொல்லி, 'மேக் - அப்' அறைக்கு சென்றேன். பின் தொடர்ந்து வந்த அவன், என் காலில் விழுந்து, 'அய்யா என்னை மன்னிச்சுடுங்க. ஆனா, வண்டி வேணாம்ன்னு அனுப்பிடா தீங்கய்யா. இந்த வண்டி வருமானத்தில் தான், அண்ணியார் குடும்பம் சாப்பிடுதுங்கய்யா...' என்றான்.'எந்த அண்ணியார்...' என்றேன்.'ராணி அண்ணியார்...' என்று சொன்னதும், எனக்கு உடல் நடுங்கியது.உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்து, அந்த டிரைவரை அழைத்துக் கொண்டு, அண்ணாதுரையின் மனைவியான ராணி அம்மையார் வீட்டுக்கு சென்றேன். அவர்களின் வறிய நிலை கண்டு வருந்தினேன். அன்று முதல், மாதா மாதம், அவரது குடும்பத்திற்கு, 5,000 ரூபாய் கிடைக்க ஏற்பாடு செய்து, அவருக்கும் ஆறுதல் கூறி விடைபெற்றேன்.அண்ணாதுரையின் வளர்ப்பு மகனான பரிமளம் அண்ணாதுரை வளர்ந்து, வேலைக்கு சென்ற பின், அவரே ஒருமுறை என்னை தேடி வந்தார்.'இனி, இந்த உதவிப் பணம் தேவைப்படாது, சித்தப்பா. நாங்கள் சம்பாதிக்க துவங்கி விட்டோம். தேவையெனில் வாங்கிக் கொள்கிறேன்...' என்றார்.பகுத்தறிவு பாசறை எனும், ஆல மரத்தின் கிளைகள் பல. அதில் ஒன்று தான், லட்சிய நடிகர், எஸ்.எஸ்.ஆர்., அவர், அரசியல், கலைத்துறைகளில் ஆற்றிய பணிகளை பற்றிய தொகுப்பு நுால் இது.கழக வெறியின் காரணமாக, பால பருவத்திலேயே படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து, பகுத்தறிவுப் பாசறையில் தன்னை இணைத்துக் கொண்டவர். எனவே தான், 'என் சுட்டு விரலை பிடித்துக் கொண்டு அரசியலுக்கு வந்தவன், தம்பி ராஜேந்திரன்...' என்று, அடிக்கடி கூறுவார், அண்ணாதுரை. அர்ச்சகர் கேட்ட, 'ஆட்டோகிராப்!'நான் என்றைக்கும் சாமி கும்பிடாதவன். கோவிலுக்கும் போகாதவன். என் நண்பனின் அப்பா, அடிக்கடி, 'நீங்க ஒருநாள் மனம் மாறி கோவிலுக்கு வரத்தான் போறீங்க...' என்பார்.என் நண்பனுக்கு கோவிலில் திருமணத்தை வைத்தார். அங்கு, நான் வரமாட்டேன் என நினைத்தவர்களுக்கு ஆச்சரியம். திருமணத்திற்கு சென்றேன்.நண்பரின் தந்தையோ, 'பார்த்தீர்களா, நீங்கள் கோவிலுக்கு வந்து விட்டீர்கள். நான் சொன்னேன் இல்லையா...' என்றார்.'என் நண்பரின் திருமணத்திற்கு வந்துள்ளேன். அது, திருமணக் கூடத்தில் நடந்தாலும், கோவிலில் நடந்தாலும், ரிஜிஸ்டர் அலுவலகத்தில் நடந்தாலும், நடுத்தெருவில் பந்தல் போட்டு நடந்தாலும், எங்கு நடந்தாலும் வருவேன். எனக்கு என் நண்பரின் திருமணம் தான் முக்கியமே தவிர, அது நடக்கும் இடம் அல்ல...' என்றேன்.திருமணம் முடிந்து, காரில் ஏறப்போகும் சமயம், திருமணத்தை நடத்தி வைத்த, கோவில் அர்ச்சகர், 'நான் உங்களின் தீவிர ரசிகன். எனக்கு, 'ஆட்டோகிராப்' போட்டுத் தாருங்கள்...' என்றார்.'பார்த்தீர்களா, இவரோ அர்ச்சகர். நானோ நாத்திகன். இருந்தும், நான் சாமி கும்பிடாதவன் என்ற போதும் கூட, அவர் என்னை நேசிக்கிறார். என் பரம ரசிகராக இருக்கிறார் பாருங்கள்...' என்றேன்.அனைவரும் சிரித்து விட்டனர். எஸ்.எஸ்.ராஜேந்திரன் பற்றி, கவிஞர், முத்துலிங்கம் எழுதிய கவிதை:லட்சங்கள் தேடும் இந்தியக் கலைஞரின்லட்சியம் தேடிய லட்சியக் கலைஞன்!கொள்கையின் பேரால் கொள்ளை இடாமல்கொள்கைக்குப் பணத்தைக் கொட்டிக் கொடுத்தவன்!அண்ணாவின் பேரால் அலட்டிக்கொள்ளாமல்அண்ணாவை நெஞ்சில் அடைத்து வைத்தவன்!கன்னங் குழி விழும் காவியச் சிரிப்பால்கிள்ளையர் இனங்களைக் கிறங்க வைத்தவன்!கிராமிய நடிப்பில் கெட்டிக்காரனாய் தராதலம் தன்னில் தடத்தைப் பதித்தவன்!— முற்றும்- எஸ்.எஸ்.ராஜேந்திரன்