இது உங்கள் இடம்!
'ரூம்' போட்டு யோசிப்பாங்களோ!உறவினரின் திருமண நிகழ்ச்சியை முடித்து, இரவு, 9:00 மணிக்கு, சென்னை புறநகர் மின்சார ரயிலில், நானும், தங்கையும் பயணம் செய்து கொண்டிருந்தோம். என் எதிரே அமர்ந்திருந்த ஒரு பெண், வண்டியிலிருந்து இறங்கி, ஜன்னல் வழியாக வந்து, 'அக்கா, 'சீட்'டின் கீழே, கீரை பையை மறந்து வைத்து விட்டேன். கொஞ்சம் எடுத்துக் கொடுங்களேன்...' என்றாள். நான் எடுப்பதற்குள், பக்கத்திலிருந்த இளைஞன் ஓடி வந்து எடுத்து, 'இந்தாங்க...' என்றான். 'நான் உன்னையா கேட்டேன். பொண்ணுங்களை பார்த்தால் போதுமே, பல்லை காட்ட வேண்டியது. என்ன ஜென்மங்களோ...' என்று, வசை பாடினாள். 'யாரு கொடுத்தா என்ன, 'சிஸ்டர்' உங்களுக்கு தேவை உங்க பொருள் தானே...' என்று சிரித்தபடியே பையை கொடுத்தான். அதற்குள் வண்டி நகரவே, சண்டை ஓய்ந்தது. நான் அவனை முறைத்தேன். 'என்னை ஏன் முறைக்கறீங்க... பையை நீங்க எடுத்துக் கொடுத்திருந்தால், உங்க கழுத்துல இருக்கிற தங்க செயினை அறுத்துக்கிட்டு ஓடியிருப்பா, அந்த பொண்ணு. வாட்டர் கேன், கவர் எதையாவது வெச்சிட்டேன்னு எடுத்துக்கொடுக்க சொல்லி கேட்பது...'பேச்சு கொடுத்தபடியே வண்டி நகரும்போது, உதவி பண்றவங்களோட கழுத்தை பதம் பார்ப்பது... இதுதான், 'லேட்டஸ்ட் ட்ரெண்ட்!' போன வாரம் இப்படி தான், ஒரு பாட்டியோட செயின் போச்சு...' என்றான். யார் எப்படி போனால் என்ன என்றில்லாமல், சமயத்தில், சாதுர்யமாக உதவிய இளைஞனுக்கு, நன்றி கூறினேன். இரவு நேரத்தில் பயணம் செய்யும் நண்பர்களே... புதுப்புது திருட்டுகளிலிருந்து தப்பிக்க, உஷாராக இருங்கள்!--ஜி.கல்பனா, சென்னை. கொண்டாட்டம் புது விதம்!நண்பர் பணிபுரியும் தனியார் நிறுவனத்தில், ஒவ்வொரு ஆண்டும், 'நட்பு கொண்டாட்டம்' என்ற விழா நடைபெறும். அக்கொண்டாட்டத்திற்கு, அந்நிறுவன பணியாளர்கள் ஒவ்வொருவரும், அவர்களின் நெருங்கிய நண்பர்கள் இருவரை அழைத்து வரலாம். அதன்படி, இவ்வாண்டு என்னை அழைத்திருந்தார், நண்பர்.நிறுவனத்திலேயே ஆட்டம், பாட்டத்துடன், விருந்து கொண்டாடுவர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அங்கு சென்ற பிறகே, கொண்டாட்டம் நிறுவனத்தில் இல்லை, நான் நினைத்தபடியான கொண்டாட்டமும் அது இல்லை என்பது தெரிந்தது.பணியாளர்கள் மற்றும் அவர்களுடைய நண்பர்கள் என, அனைவரும் ஆஜரானதும், நிறுவனத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேருந்தில், ஆதரவற்றோர் இல்லம் அழைத்துச் சென்றனர். நிறுவனமும், பணியாளர்களும் பகிர்ந்து கொண்ட தொகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தையும், உடைகளையும், அங்குள்ளோருக்கு எங்கள் கைகளால் வழங்கச் செய்தனர்.இச்செயல், எங்கள் அனைவரையும் நெகிழச் செய்ததோடு, இதேபோல் நாமும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது. நண்பனுக்கும், அவனது நிறுவனத்துக்கும், மனதார நன்றி கூறினேன். புதுவிதமான இக்கொண்டாட்டத்தை, அனைத்து நிறுவனமும் பின்பற்றி, ஆதரவற்றோருக்கு உதவ முன் வரலாமே.-சி.அருள்மொழி, கோவை.இப்படியும் வாழலாமே...பெங்களூரில் உறவினர் ஒருவர் வசிக்கும், 'அப்பார்ட்மென்டில்' 70 வயதை கடந்த, முதிய தம்பதி உள்ளனர். இருவருமே இனிய சுபாவம் கொண்டவர்கள். அவர்களுக்கு ஒரு பெண், மூன்று மகன்கள். அனைவரும் வெளிநாட்டில் வசிக்கின்றனர். ஒருநாள் கூட, எந்த பிள்ளையும் அருகில் இல்லையே என, குறைப்பட்டு கொண்டதில்லை. ஏழு பேரன், பேத்திகள். அனைவருடனும், 'ஸ்கைப்'பில் பார்த்து பேசுவர்.கணவன் - மனைவி இருவருமே சமையலில் கைதேர்ந்தவர்கள். பொழுது போக, மதியம், இரவு இரண்டு வேளையும் ஏதாவது, 'ஸ்பெஷல்' ஆக செய்வர். 'தேவைப்படுவோர், முன்கூட்டியே சொல்லுங்கள். குறைந்த விலை, தரமான உணவு...' என, 'வாட்ஸ் ஆப்' குழுவில் போடுவர். அனைவருமே அவர்களை, தாத்தா - பாட்டி என்று தான் அழைப்பர். வெளியே செல்வோர், தனியாக வசிக்கும் பேச்சுலர்கள், அவரவருக்கு தேவையானதை வாங்கிக் கொள்வர். 'பெரிதாக வருமானம் இல்லை என்றாலும், மன நிறைவும், பொழுதும் போகிறது. உணவை வாங்கி செல்வோர், நன்றாக இருந்தது என்று கூறும் மன திருப்தி எங்களுக்கு போதும்...' என்பர்.பெரியவர், நன்றாக ஆங்கிலப் புலமை உள்ளவர் என்பதால், 'அப்பார்ட்மென்ட்' குழந்தைகளுக்கு, கட்டுரைகள் எழுதிக் கொடுப்பது, ஆங்கிலம் சொல்லிக் கொடுப்பதும் அடிக்கடி நடக்கும். மாமியும் குழந்தைகளிடம் பிரியமாக இருப்பார். விசேஷ நாட்களில் அக்குழந்தைகள், அவர்கள் வீட்டில் தான் இருப்பர். இல்லாததற்கு வருத்தப்படுவதை விட, கிடைப்பதை அனுபவிப்பது; இருக்கிற சூழலில் சந்தோஷமாக வாழ்வது எப்படி என, இவர்களைப் பார்த்து கற்றுக் கொள்ளணும். அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழும் இவர்கள் முதுமை மரியாதைக்குரியதே!தி.வள்ளி, திருநெல்வேலி.