இது உங்கள் இடம்!
எழுத்தறிவித்தவன்...என் தோழியின் மகன், வங்கியில் கடன் வாங்கி படித்து, நல்ல மதிப்பெண் பெற்று, அயல்நாட்டில் வேலைக்கு சென்றான். அங்கு சென்ற பின், அவன் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை, ஆரம்பத்திலிருந்தே, படிப்பவர்களுக்கு கொடுத்து உதவினான்.அவனது கிராமத்தில் மிக கஷ்டநிலையில், நன்றாக படிக்கும் ஒரு பையனை தேர்ந்தெடுத்து, அவன் செலவிலேயே படிக்க வைத்து, அயல் நாட்டில் வேலை வாங்கிக் கொடுத்து, அந்த பையனின் குடும்பம் முன்னேற பாடுபட்டான்.இப்போது, அந்த பையனும், இதேபோல், தன் கிராமத்தில் வறுமை நிலையில் உள்ளவர்களை கண்டுபிடித்து, அவர்களுக்கு உதவி வருகிறான். இப்படியாக அவர்களின் உதவும் மனப்பான்மை வளர்கிறது.மேலும், அவர்களது குடும்பம், குடும்பத்தில் உள்ள அக்கா - தங்கைகள் அனைவரும் உயர் படிப்பு படித்து, நல்ல பதவியில் உள்ளனர்.எனவே, உயர் படிப்பு முடித்து, நல்ல வேலையில் உள்ளோர், படிப்பில் ஆர்வம் உள்ள ஏழை மாணவர்களுக்கு இதுபோல் உதவலாமே!இந்திராணி தங்கவேல், சென்னை.முன்பதிவு பெட்டிகளிலும், எச்சரிக்கை மக்களே...செங்கோட்டையிலிருந்து சென்னை எழும்பூர் செல்லும் ரயிலில் பயணித்தோம். வண்டி கிளம்பிய சற்று நேரத்தில், 40 வயது மதிக்கத்தக்க பெண் டிக்கெட் பரிசோதகர் வந்து சென்றார். முன் பதிவு பெட்டிகளில், இரவு ரோந்து போலீசார் வரவே இல்லை.அதிகாலை, 1:00 மணிக்கு மேல், சிலர், முன்பதிவு பெட்டிகளில் ஏறி, கழிவறை செல்லும் வழி மற்றும் 'பர்த்'களின் கீழ் அமர்ந்தும், படுத்தும், கால் வைக்க இடமின்றி, தானும் துாங்காமல், மற்றவர்களையும் துாங்க விடாமல் தடுக்கின்றனர். இதில் நல்லவர் யார், தீயவர் யார் என்பது தெரிவதில்லை.எங்களது படுக்கைக்கு கீழ், சந்தேகப்படும்படியாக ஒரு பெண் அமர்ந்திருந்தாள்.என் கணவரிடம், விளக்கை போட்டு, மணி என்ன என, பார்க்குமாறு கூறினேன்.'அதிகாலை 2:00 மணி தான் ஆகிறது...' என்றார்.சிறிது நேரத்தில், கையில் ஒரு கட்டை பையை எடுத்து, அடுத்த பெட்டிக்கு நழுவினாள், அப்பெண்.அதன்பின், சற்று நேரம் நிம்மதியாக துாங்கினோம். காலையில் இறங்கும் போது, எல்லா பொருட்களையும் சரிபார்த்ததில், 10 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன் காணாமல் போயிருந்தது.முன்பெல்லாம் ரயிலில் பயணிப்பது மகிழ்ச்சியை தந்தது; உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இருந்தது. இப்போது அப்படி இல்லை.இந்நிலை மாற, அனைத்து ரயில் பெட்டிகளிலும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி, பயணிகளின் பாதுகாப்பை உறுதிபடுத்துமா, ரயில்வே நிர்வாகம்.ஜி. தேவகுமாரி, சென்னை.மனைவியை, வேலைக்காரியாக நடத்துபவரா நீங்கள்?கடன் வாங்கி, மகளுக்கு, திருமணம் செய்து வைத்தேன். வரும் தலை தீபாவளிக்கு சீர் செய்யணும். திருமண கடனிலிருந்தே இன்னும் மீளவில்லை. கடன் கேட்க, இனி சொந்தத்திலோ, நட்பு வட்டத்திலோ ஆளே கிடையாது. தீபாவளி சீர் எப்படி செய்வது என, பைத்தியம் பிடிக்காத குறை தான்.என் கவலையை அறிந்த மனைவி, 'தபால் அலுவலகத்தில், மாதா மாதம், 500 ரூபாய் சேமித்து வைத்துள்ளேன். அதை உபயோகித்துக் கொள்ளலாம்...' என்றாள்.மனைவியிடம் எப்போதுமே பணம் கொடுக்க மாட்டேன். பணம் கேட்டாலும் திமிராக பேசுவேன். பெண்கள் கையில் பணம் இருந்தால் கணவனை மதிக்க மாட்டார்கள் என்று யாரோ கூறிய உபதேசத்தை பின்பற்றி, இத்தனை ஆண்டுகளாக மனைவியை கீழ்த்தரமாக நடத்தியதை எண்ணி வருத்தப்பட்டேன்.காய், சேலை, துணி தைக்க என, கொடுக்கும் பணத்தில் சிறுக, சிறுக சேர்த்திருக்கிறார். மகளுக்கு சீர் செய்ய இந்த பணமே போதும் என, நினைக்கும்போதே, சந்தோஷமாக இருந்தது.வியாபாரத்தில் நன்றாக வருமானம் வந்தபோது, அனாவசிய செலவு செய்வதை தவிர்த்து, மனைவியின் செலவுக்கு தனியாக பணம் கொடுத்திருந்தால், மகளின் திருமணத்தையே கடன் இல்லாமல் நடத்தியிருப்பாள் என்பது, அப்போது தான் உரைத்தது.இதை படிக்கும் அனைத்து நண்பர்களும், நான் செய்த தவறை செய்யாமல், மனைவியை வேலைக்காரியாக கருதாமல், உற்ற துணையாக நடத்துங்கள், நம் வாழ்க்கை மென்மேலும் உயரும்.எம். முரளி, சென்னை.