நம்மிடமே இருக்கு மருந்து - முட்டைகோஸ்!
முட்டைகோஸ், வெள்ளை, பச்சை மற்றும் ஊதா போன்ற நிறங்களில் உள்ளன. பச்சை இலை காய்கறிகளில் ஒன்றான முட்டைகோசில், வைட்டமின் ஏ, பி1, பி2, பி6, இ, சி, கே, கால்சியம், அயோடின், பொட்டாசியம், சல்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள், தாதுக்கள் மற்றும் மினரல்களும் நிறைந்துள்ளன.இதிலுள்ள வைட்டமின் ஏ, கண் பார்வை தெளிவாக தெரியவும், இதன் ஊட்டச்சத்துக்கள், சரும வறட்சி, தலைமுடி உதிர்வு, உடல் சூடு, தொற்று நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தவும் உதவுகின்றன.முட்டைகோஸ் ஜூசில், குறைவான கலோரியே உள்ளதால், உடலில் அதிகப்படியான கொழுப்பு சேராது. இதை குடிப்பதால், உள்ளுருப்புகளில் படிந்திருக்கும் டாக்சின்களை அழித்து, எளிதாக உடல் எடையைக் குறைக்க உதவும்.அல்சர் உள்ளோர், முட்டைகோஸ் தண்ணீர் அருந்தி வருவதால், விரைவில் குணமடைய முடியும். புற்றுநோயால் பதிக்கபட்டவர்களுக்கு, முட்டைகோஸ் ஜூஸ் மிகவும் நல்லது. முட்டைகோஸ் ஜூசில் அதிகப்படியான, 'ஐசோசியனேட்' இருப்பதால், இவை நுரையீரல், வயிறு போன்ற இடங்களில் புற்றுநோய் பாதிப்பு உண்டாவதை தடுக்கின்றன.சருமத்தில் ஏற்படக்கூடிய மரு, கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் போன்ற பிரச்னைகளுக்கு, முட்டைகோஸ் ஜூஸ், நல்ல பலன் தருகிறது.முட்டைகோஸ் ஜூஸ் தொடர்ந்து குடித்து வருவதால், சரும ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன், என்றும் இளமையுடன் இருக்க உதவுகிறது.உடலில் உள்ள நச்சுக்களை நீக்கப் பயன்படுகிறது. தலைமுடி உதிர்வதை குறைக்கிறது. சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால், எலும்புகளும், பற்களும் உறுதியாகிறது. வியர்வைப் பெருக்கியாக செயல்படுகிறது. சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றுகிறது.செரிமான மண்டலத்தைச் சீராக்கி, மலச்சிக்கல் பிரச்னை ஏற்படாமல் பாதுகாக்கிறது.'பியூட்டி மினரல்ஸ்' என்றழைக்கப்படும் சிலிகான், சல்பர் சத்துக்கள் முட்டைகோசில் உள்ளன. உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து, நீரிழிவு நோய் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. 'இண்டோல் 3 கார்பனைல்' என்ற சத்து, கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி, ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.பீட்டா- கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், கண்புரை ஏற்படுவதைத் தடுக்கிறது. பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை ஈடு செய்கிறது. நரம்புகளுக்கு வலு கொடுக்கிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது. தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.முட்டைகோசை நீரில் போட்டு சிறிது நேரம் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால், வறட்சியான சருமம் பளபளப்படையும்.தொகுப்பு: -மு.ஆதினி