திருப்பூர்:சில மாநிலங்கள் மானியம் வழங்கி வரும் நிலையில், தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டணம் அதிகமாக இருப்பதால், பனியன் நிறுவனங்கள் இடம்பெயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தொழில் துறையினர் கவலை அடைந்துள்ளனர்.தேவையான நிலம், யூனிட்டுக்கு 2 ரூபாய் மானியத்துடன் மின்சார வசதி, மிகக் குறைந்த சம்பளத்தில் தொழிலாளர் என, அனைத்து வசதிகளும் அளிப்பதாக, பீஹார், குஜராத், மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா போன்ற மாநில அரசுகள் அழைப்பு விடுத்து வருகின்றன. ஜவுளித் தொழிலில் யூனிட் அடிப்படையிலான மின் கட்டணம் தமிழகத்தில் அதிகமாக உள்ளது. ராஜஸ்தான் - 7.59 ரூபாய், பஞ்சாப் - 7.81 ரூபாய், கர்நாடகா - 8.37 ரூபாய், ஆந்திரா - 8.62 ரூபாய், தெலுங்கானா - 8.74 ரூபாய், தமிழகம் - 9.09 ரூபாய் என்ற அளவில் இருப்பதாக தொழில் துறையினர் கூறுகின்றனர்.ஏற்கனவே மின் கட்டணம் குறைவாக இருக்கும் மாநிலங்களில், சிறு, குறு தொழில்களுக்கு, யூனிட்டுக்கு 2 - 2.50 ரூபாய் வரை மானியம் வழங்குகின்றனர். இதனால், அத்தகைய மாநிலங்களை நோக்கி நிறுவனங்கள் இடம்பெயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.இது குறித்து, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் கூறியதாவது:தமிழக அரசு புதிய முதலீடுகளை ஈர்த்து, புதிய தொழில்கள் துவங்குவதில் அதிக ஆர்வம் செலுத்துகிறது. மாறாக, கைவசம் உள்ள நல்ல தொழிலை, பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் முயற்சியை எடுக்கவில்லை. பிற மாநிலங்களில் வழங்குவது போல், தொழில் துறையினருக்கு தமிழக அரசு மின் கட்டண மானியம் வழங்க வேண்டும். அது மட்டுமே தற்போதைய நெருக்கடி நிலைக்கு மாமருந்தாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.