கோவையில் தன்னைச் சந்தித்து கோரிக்கைகளை வலியுறுத்திய தொழில் துறையினரிடம், தேர்தலுக்குப் பின், அனைத்துக் கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக, பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியானபின், முதல்முறையாக நேற்று முன்தினம் தமிழகத்துக்கு வந்த பிரதமர் மோடி, கோவையில் நடந்த, 'ரோடு ஷோ'வில் பங்கேற்றார். கோவை சர்க்யூட் ஹவுசில் அன்றிரவு தங்கிய அவர், கோவை தொழில்துறையினர் சிலரை நேரில் சந்தித்து பேசினார்.'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், பண்ணாரி குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரமணி ஆகிய மூவரும் பிரதமரை சந்தித்துப் பேசினர். குஜராத் மாடலை விளக்கிய மோடி
'சிறுதுளி' நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் கூறியதாவது:கோவையில் நொய்யல் மீட்புக்காக, 'சிறுதுளி' மேற்கொண்ட பணிகளை விளக்கினோம். நொய்யல் சீரமைப்பு, கழிவுநீர் கலப்பது, கோவையின் தண்ணீர் பிரச்னை குறித்து நாங்கள் விளக்கியதும், 'ஜல்சக்தி' என்று உற்சாகமாகப் பேசினார். அவர், குஜராத்தில் தான் முதல்வராக இருந்தபோது, அப்போதிருந்த தண்ணீர்ப் பிரச்னைக்கு எப்படித் தீர்வு காணப்பட்டது என்பதை விரிவாக விளக்கினார்.'குஜராத்தில் கடுமையான தண்ணீர் பஞ்சம் இருந்தது; ஒரு பகுதி பாலைவனமாக இருந்தது; அதற்குத் தீர்வு காண, நுாறு நாட்களில் ஒரு லட்சம் குட்டைகளை வெட்டினோம்; இப்போது தண்ணீர் தேவையில் அம்மாநிலம் தன்னிறைவு அடைந்துள்ளது' என்று தெரிவித்தார். நொய்யல் சீரமைப்புக்கு உதவ வேண்டும்; நொய்யலில் கழிவுநீர் கலப்பது குறித்து, ஜல்சக்தி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சென்றுள்ளனர். கோவையில் மட்டுமின்றி, தேசிய அளவில் பெரும் பிரச்னையாக உருவெடுத்து வரும் கழிவுநீர்ப் பிரச்னைக்குத் தீர்வு காண, புதிய தொழில் நுட்பத்தைக் கண்டறிந்து, அதற்கு மத்திய அரசே நிதி ஒதுக்க வேண்டும்.மரங்கள் வளர்ப்பதற்கு நிறைய இடங்கள் தேவைப்படுவதால், மத்திய அரசின் இடங்களை ஒதுக்க வலியுறுத்தினோம். குறிப்பாக, ரயில்வேக்கு ஏராளமான இடம் இருக்கிறது; வெளிநாடுகளில் இருப்பது போல, ரயில் தடங்களின் இரு புறமும் மரங்களை வளர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம். கால் மணி நேரம் எங்களுடன் செலவிட்ட அவர், எல்லாவற்றுக்கும், 'பாசிட்டிவ்' ஆகவே பதிலளித்தார்.இவ்வாறு வனிதா மோகன் தெரிவித்தார். பெரும் நம்பிக்கை
பிரதமர் மோடியைச் சந்தித்த தொழில்துறையினர் கூறுகையில், 'எல்லாவற்றுக்கும் ஒரு பதில் வைத்திருந்த அவர், அனைத்துக்கும் தான் செய்த சாதனையை பற்றி ஓர் உதாரணத்தையும் சொல்லி, எங்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்தார். இந்த சந்திப்பு, பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது' என்றனர்.
தொழில் துறைக்கு பிரதமர் உறுதி
இந்திய தொழிற்கூட்டமைப்பின் சி.ஐ.ஐ., முன்னாள் தலைவர் ரவி ஷாம் உள்ளிட்ட சிலர், பிரதமரை தனியாக சந்தித்து பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து ரவி ஷாம் கூறியதாவது:ஜவுளித்தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில், ஐரோப்பிய நாடுகளுடன் தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்பதை முதலில் வலியுறுத்தினோம். கோவை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்; இங்கிருந்து வெளிநாட்டு விமானங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கையை மிகவும் அழுத்தமாக வைத்து உள்ளோம்.கோவையில் இருந்து நேரடி விமான வசதியின்றி, வேறு நகரங்களுக்குச் சென்று, அங்கிருந்து வெளிநாடு செல்ல வேண்டியுள்ளது; அதேபோல, வெளிநாடுகளிலிருந்தும் நேரில் இங்கு வரமுடிவதில்லை. இதையெல்லாம் விளக்கினோம். எல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்ட பிரதமர் மோடி, ''தேர்தலுக்குப் பின், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தத்தைக் கையெழுத்திட நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். கோவையின் தேவைகள் குறித்து, எனது அலுவலகத்தை எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று உறுதியளித்தார்.இவ்வாறு, ரவி ஷாம் தெரிவித்தார்.
'கரும்புக்கு 'ட்ரிப்' போடுங்க!'
பிரதமர் மோடியை கோவை தொழில் துறையினர் சந்தித்தபோது, பண்ணாரி குழுமத் தலைவர் எஸ்.வி.பாலசுப்ரமணியம், சர்க்கரை ஆலை நடத்துவது பற்றி கூறியுள்ளார். அப்போது, ''கரும்புக்கு தான் அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது; கரும்பு விவசாயிகள் அனைவரும் சொட்டு நீர்ப்பாசனத்துக்கு மாற வேண்டியது அவசியம்,'' என்று பிரதமர் மோடி அறிவுரை அளித்துள்ளார்.சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் ரமணி, குஜராத் மாநிலம் ஆனந்த் நகரில், சங்கரா கண் மருத்துவமனை துவக்குவதற்கு, அப்போது அந்த மாநிலத்தின் முதல்வராக மோடி உதவியதை நினைவு கூர்ந்து நன்றி தெரிவித்துள்ளார். தற்போது பிரதமர் மோடியின் வாரணாசி தொகுதியில், சங்கரா கண் மருத்துவமனை கட்டப்பட்டு வருவதைப் பற்றி தெரிவித்ததும், பிரதமர் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளார்.-நமது சிறப்பு நிருபர்-