சென்னை:தென் மாவட்டங்களுக்கான பேருந்துகளுக்காக, கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கடந்த டிச., 30ல் திறக்கப்பட்டது. அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயணியர் கிளாம்பாக்கத்திற்கு செல்ல அவதிப்படுகின்றனர். இதற்கான மாற்று ஏற்பாடுகளை செய்ய, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து சி.எம்.டி.ஏ., வெளியிட்ட அறிக்கை: வண்டலுார், ஊரப்பாக்கம் ரயில் நிலையங்களில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு மக்கள் சென்று வர, இரண்டு மினி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேடுக்கு, 5 நிமிடத்திற்கு ஒன்று, கிண்டிக்கு, 3 நிமிடத்திற்கு ஒன்று, தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒன்று என்ற விகிதத்தில், மாநகர போக்குவரத்து கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன.இத்துடன் சோழிங்கநல்லுார், வேளச்சேரி, திருவான்மியூர், தி.நகர் உள்ளிட்ட 11 இடங்களுக்கு, இணைப்பு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.கிளாம்பாக்கத்தில் இருந்து பொதுமக்கள் ஆட்டோ, கார்களில் செல்ல முன்பதிவு சேவை துவக்கப்பட்டுள்ளது. இதில், 642 ஆட்டோக்கள், 512 கார்கள் பதிவு செய்து இயங்கி வருகின்றன. ஊரப்பாக்கம் - வண்டலுார் இடையே கிளாம்பாக்கத்தில், 20 கோடி ரூபாயில் புதிய ரயில் நிலையம் அமைக்கவும், நடைமேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்தை நீட்டிக்கவும், ஊரப்பாக்கம் அயஞ்சேரி சந்திப்பில், ஜி.எஸ்.டி., சாலையில் போக்குவரத்து மேம்பாட்டிற்காக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.வெளிவட்ட சாலையில் ஆம்னி பேருந்து நிறுத்துமிட கட்டுமான பணிகள், ஆகஸ்டில் முடிக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.