| ADDED : ஆக 18, 2024 12:30 AM
சென்னை, கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையின் பராமரிப்பு பிரிவில், மெட்ரோ ரயில் பராமரிப்பு செயல்திறனை மேம்படுத்தும் வகையில், அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் மற்றும் கருவி தொகுப்புகளின் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.இவற்றை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவன இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி, மெட்ரோ ரயில் இயக்க ஆலோசகர் ராமசுப்பு, தலைமை பொது மேலாளர் ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:முதல் கட்டத்தில் இரண்டு வழித்தடங்களில் தற்போது மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களின் காற்றழுத்தங்களை ஆய்வு செய்து, பழுது பார்த்து சரிசெய்யும் வசதிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன. கருவி தொகுப்புகளின் கிடங்கு, திறமையான பராமரிப்பு செயல்பாடுகளை மேம்படுத்துகிறது. இந்த உள்கட்டமைப்பு மேம்பாடு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பராமரிப்பை மேம்படுத்தி, செலவுகளைக் குறைத்து, புதுமையை வளர்ப்பதை ஊக்குவிக்கிறது.இவ்வாறு கூறினர்.