| ADDED : ஜூலை 07, 2024 04:08 AM
கடலுார்: கடலுார் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் வருகைப் பதிவேடு குறைந்ததால் வெளியேற்றப்பட்ட மாணவர்கள் மேலாண்மை நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.கடலுார் டாக்டர் எம்.ஜி.ஆர். கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-24ம் கல்வி ஆண்டில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி வகுப்பு பகுதி நேர படிப்பில் 380 பேர் சேர்க்கை நடந்தது.இதில் 250க்கும் மேற்பட்டவர்கள் கூட்டுறவுத் துறையின் கீழ் இயங்கும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளராக வேலை செய்கின்றனர்.நேற்று காலை வழக்கம் போல் மாணவர்கள் பயிற்சி வகுப்பிற்கு வந்தனர். அப்போது வருகைப் பதிவேடு குறைவாக இருப்பதாகக் கூறி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் கணேசன், 246 பேரை வகுப்பறையில் இருந்து வெளியேற்றினார்.இதில், 200க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடை விற்பனையாளர்கள். இவர்கள் மேலாண்மை நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்புநிலவியது.இதுகுறித்து வெளியேற்றப்பட்ட மாணவர்கள் கூறுகையில், 'கூட்டுறவுத்துறையில் கீழ் மட்டத்தில் வேலை செய்பவர்கள் அடுத்த கட்ட பதவி உயர்வுக்கு கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயற்சியில் பகுதி நேர வகுப்பில் சேர்ந்து படிக்கின்றோம். இதில் ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்களே அதிகம். மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர வகுப்புகள் ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் நடக்கும்.ரேஷன் கடைகளில் வேலை செய்பவர்களுக்கு சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் வசதியாக இருந்தது. வகுப்புகள் நடக்கும் நாட்களில் மாவட்ட கூட்டுறவுத் துறை அதிகாரிகள் கடையை திறக்க வேண்டும் என உத்தரவிடுவதால், வருகைப்பதிவு குறைந்துள்ளது' என்றனர்.தகவல் அறிந்த தமிழ்நாடு நியாயவிலைக் கடை பணியாளர் சங்க மாநில நிர்வாகி ஜெயசந்திர ராஜா, சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி, உயர் அதிகாரிகளிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு சென்றனர்.