| ADDED : ஜூலை 10, 2024 11:41 PM
வேடசந்துார்:ஆசிரியர் இடமாறுதலில் அரசாணை 243ஐ ரத்து செய்து, மீண்டும் பழைய முறைப்படி கலந்தாய்வை நடத்த கோரி, சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை ஜூலை 29, 30, 31ல் முற்றுகையிட டிட்டோஜாக் முடிவு செய்துள்ளது.அரசாணை 243ஐ கைவிட்டு மீண்டும் பழைய முறைப்படி கலந்தாய்வை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஆசிரியர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக கவுன்சிலிங் நடந்த இடங்களில் ஒட்டுமொத்த ஆசிரியர்களும் தற்செயல் விடுப்பு எடுத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.வட்டார அளவிலும் மாலை நேர ஆர்ப்பாட்டம் செய்தனர். இருந்தும் அரசு செவி சாய்க்கவில்லை. இதில் வெறுப்படைந்த ஆசிரியர்கள், அடுத்த கட்ட போராட்டத்திற்கு டிட்டோஜாக் உயர்மட்ட குழு கூட்டத்தை காணொலி வாயிலாக நடத்தினர்.இதில் ஜூலை, 29, 30, 31ல் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.