புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் அணை நீர்வரத்தை விட, வெளியேற்றும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், பவானிசாகர் அணை நீர்மட்டம் சரிந்து வருகிறது.பவானிசாகர் அணை நீர்மட்டம், 105 அடி உயரம்; 32.8 டிஎம்சி கொள்ளளவு கொண்டது. அணை மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள. 2.47 லட்சம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால் கடந்த ஜன.,7 முதல், கீழ்பவானி இரண்டாம் போக புன்செய்பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால், பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியது.நேற்றைய நிலவரப்படி அணை நீர்வரத்து, 142 கன அடியாக இருந்தது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டுள்ளதால் அணை நீர் மட்டம் சரிந்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம், 73.71 அடி; நீர் இருப்பு, 12.5 டி.எம்.சி., ஆக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக கீழ்பவானி வாய்க்காலில், 2,300 கன அடி தண்ணீர், அரக்கன் கோட்டை தடப்பள்ளி பாசனத்துக்கு, 700 கன அடி தண்ணீர், குடிநீர் தேவைக்காக, 100 கன அடி தண்ணீர் என மொத்தம், 3,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. அணை நீர்வரத்தை விட, வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், அணை நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்தாண்டு இதே நாளில் பவானிசாகர் அணை நீர்மட்டம், 98.19 அடி; நீர் இருப்பு, 27.3 டி.எம்.சி., யாக இருந்தது குறிப்பிடத்தக்கது.