| ADDED : மார் 28, 2024 09:07 PM
ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், ஸ்ரீபெரும்புதுார் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த 1,000த்துக்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர்.தற்போது பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்து வரும் நிலையில், நேற்று முன்தினம் மதியம், சிறப்பு வகுப்பு முடிந்து வீட்டிற்கு சென்ற மாணவர்கள் மூன்று பேர், சென்னை -- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், சுங்குவார்சத்திரம் நோக்கிச் சென்ற கன்டெய்னர் லாரியின் பின்புறம் நின்றபடி ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.இதைக் கண்ட வாகன ஓட்டிகள், தங்களின் மொபைல் போனில் படம் பிடித்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டனர். இந்த வீடியோ தற்போது வேகமாக பகிரப்பட்டு வருகிறது.மாணவர்களின் ஆபத்தான இந்த பயணம், பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை தடுத்து நிறுத்த, ஸ்ரீபெரும்புதுார் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.