ஊத்தங்கரை:ஊத்தங்கரை அருகே, கோவில் திருப்பணிகளுக்கு அரசு வழங்கிய, 86.06 லட்சம் ரூபாயை கையாடல் செய்த, ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளரை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி
மாவட்டம், ஊத்தங்கரை ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளராக கடந்த,
2021ல் இருந்து பணிபுரிந்தவர் பால்வண்ணன், 50; இவரது
கட்டுப்பாட்டில் ஊத்தங்கரை தாலுகாவில், 43 கோவில்கள் இருந்தன. கடந்த,
2023 டிச., 12 ல் இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிபூண்டி ஹிந்து
அறநிலையத்துறை ஆய்வாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால்,
பல வாரமாகியும், அவர் தன் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லை.
கும்மிடிப்பூண்டிக்கு சென்று பொறுப்பும் ஏற்கவில்லை. துறை
அதிகாரிகள் கேட்கும்போது உடல்நலம் சரியில்லை எனக்கூறி
சமாளித்துள்ளார்.சந்தேகமடைந்த அதிகாரிகள் கடந்த பிப்., 19 ல்
ஊத்தங்கரை ஹிந்து சமய அறநிலையத்துறை இன்ஸ்பெக்டராக
வெங்கடாஜலம் என்பவரை நியமித்தனர். அவர் பொறுப்பேற்ற பின்,
கணக்குகளை தணிக்கை செய்தபோது, கோவில் திருப்பணிக்காக பல்வேறு
கோவில்களுக்கு வழங்கப்பட்ட, 86.06 லட்சம் ரூபாயை, மறுநாளே எடுத்தது
தெரிந்தது. மேலும், அந்த கணக்குகளை அவர் தனியாக கையாண்டதால், இது
குறித்து யாருக்கும் தெரியவில்லை. சம்பந்தப்பட்ட கோவில்களின்
அறங்காவலர்கள், ஊர்மக்கள் யாரும் புகார் அளிக்காததால், பால்வண்ணன்
செய்த கையாடல் தெரியவில்லை.இது குறித்து துறை அதிகாரிகள்
கூறுகையில், 'கோவில் திருப்பணிகளுக்கு, வழங்கிய பணத்தை கையாடல் செய்த
பால்வண்ணன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். தற்போது தலைமறைவாக
உள்ள அவர் மீது, கிருஷ்ணகிரி, ஹிந்து அறநிலையத்துறை உதவி கமிஷனர்
ஜோதிலட்சுமி, ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலுவலகத்தில் புகார்
அளித்துள்ளார். பால்வண்ணனை பிடித்து பணத்தை மீட்க, நடவடிக்கை
எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளோம்' என்றனர்.