| ADDED : ஆக 19, 2024 12:48 AM
ராமநாதபுரம் : மதுரையிலிருந்து -ராமேஸ்வரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்:87ல் முறையாக பராமரிப்பு பணிகள் செய்யாமல் சுங்க கட்டணத்தை மட்டும் கராறாக வசூலிக்கலாமா என வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர். சாலை மேம்பாடு, பராமரிப்பு பணிகளை செய்ய நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும். மதுரை--ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை இருவழிப்பாதையாக இருந்தது. இதனை நான்கு வழிச்சாயைாக மாற்ற 2015 ல் திட்டம் துவக்கப்பட்டது. ரூ.1387 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. இதில் 2019 ல் ரூ.927 கோடி ஒதுக்கப்பட்டு மதுரை முதல் பரமக்குடி வரை 75 கி.மீ., நான்கு வழிச்சாலையாக பசுமை வழித்தடமாக அமைக்கப்பட்டுள்ளது. பரமக்குடி முதல் ராமநாதபுரம் வரை 39 கி.மீ., சாலை இருவழி பாதையாகவே உள்ளது. இருந்தும் இங்குள்ள சத்திரக்குடி பகுதியில் டோல்கேட் அமைத்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையில் எந்த பராமரிப்பு பணிகளையும் செய்யாமல் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மெத்தனப்போக்கில் உள்ளது. இதனால் சத்திரக்குடி பகுதியில் ரோட்டின் இரு புறங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து ரோடுவரை ஆக்கிரமித்துள்ளன. இவற்றை அகற்ற வேண்டிய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை. சுங்க கட்டணம் வசூலிப்பதில் மட்டுமே கராறாக இருக்கின்றனர். சாலை மேம்பாடு, பராமரிப்பு பணிகளை செய்து வாகனங்கள் சிரமமின்றி செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என வாகன ஓட்டிகள் குமுறுகின்றனர். தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நடவடிக்கை எடுக்குமா. ------------