ஏற்காடு:ஏற்காடு மலைப்பாதையில் தனியார் பஸ் உருண்டு விபத்துக்குள்ளானதில், சிறுவன் உட்பட ஐந்து பயணியர் உயிரிழந்தனர். டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டியதே விபத்துக்கு காரணம் என, போலீசார் தெரிவித்தனர்.சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இருந்து நேற்று மாலை, 5:30 மணிக்கு, 'முத்து' என்ற தனியார் பஸ், 70 பயணியருடன் புறப்பட்டது. ஏற்காடு, வாழவந்தியை சேர்ந்த டிரைவர் ஜெயரத்தினம் ஓட்டினார். அவர் வளைவிலும் பஸ்சை வேகமாக இயக்கியுள்ளார்.அப்போது, 13வது கொண்டை ஊசி வளைவில் பஸ் வந்த போது, கட்டுப்பாட்டை இழந்த பஸ், இடது புறம் திரும்பாமல் நேராக சென்று கொண்டை ஊசி வளைவு எதிரே உள்ள தடுப்புச்சுவரை உடைத்து, 100 அடி பள்ளத்தில் உருண்டது. குறிப்பாக, 13வது கொண்டை ஊசி வளைவில் விபத்தில் சிக்கிய பஸ், மலைப்பகுதியில் உருண்டு 11வது கொண்டை ஊசி வளைவில் தலை குப்புற கவிழ்ந்து விழுந்தது.இதில், பஸ்சில் பயணித்தவர்கள், அங்கும், இங்குமாக சிதறி விழுந்து படுகாயம் அடைந்தனர். சிலர் ஜன்னல் வழியே, வெளியே துாக்கி வீசப்பட்டனர். பஸ்சில் பயணித்த திருச்செங்கோட்டை சேர்ந்த சிறுவன் முனீஸ்வரன், 10, சேலம், சூரமங்கலம், ஆண்டிப்பட்டி, ஏ.சி.எம்., நகரை சேர்ந்த கார்த்திக், 37, கன்னங்குறிச்சி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஹரிராம், 57, ஏற்காடு பி.டி.ஓ., அலுவலகத்தில் கணினி பிரிவில் பணிபுரிந்த சந்தோஷ், 40, கிச்சிப்பாளையம் மாது, 60, ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயமடைந்தனர்.தகவலறிந்த வருவாய் துறையினர், போலீசார், தீயணைப்பு அலுவலர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்கள் உடனடியாக, 10க்கும் மேற்பட்ட, '108' அவசர கால ஆம்புலன்ஸ், ஐந்து தனியார் ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாயிலாக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதன்படி, 60க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தால் ஏற்காடு மலைப்பாதையில், ஐந்து மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்தில், எஸ்.பி., அருண்கபிலன் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பார்த்து, சேலம் கலெக்டர் பிருந்தாதேவி ஆறுதல் கூறினார். சம்பவம் குறித்து, ஏற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் கூறுகையில், 'மொத்தம் 52 இருக்கைகள் கொண்ட பஸ்சில், 70 பேர் பயணித்துள்ளனர். கூட்ட நெரிசலால், 15க்கும் மேற்பட்டோர் நின்றபடி பயணித்துள்ளனர். டிரைவர் பஸ்சை வேகமாக ஓட்டியதால் விபத்து ஏற்பட்டு சம்பவ இடத்தில், நான்கு பேர், மருத்துவமனையில் ஒருவர் என, ஐந்து பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். விபத்துக்கு பின், பஸ் டிரைவர் ஜெயரத்தினம், ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தார். தொடர்ந்து விசாரணை நடக்கிறது' என்றனர்.