| ADDED : மே 02, 2024 05:26 AM
காரைக்குடி: அரசு ஊழியர்களுக்கு வருமான வரி பிடித்தம் செய்வதில் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து சம்பளம் கிடைப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் மாதாந்திர சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு அந்தந்த கருவூலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அவற்றை பரிசீலனை செய்து, கருவூலம் அனுமதிக்கப்பட்ட அதே நாளிலேயே அரசு ஊழியர்களுக்கு தமிழகம் முழுவதும் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். மாதத்தின் கடைசி நாளில் சம்பளம் வரவு வைக்கப்படும் நிலையில் இந்த மாதம் சம்பளம் வழங்கப்படாததால் அரசு ஊழியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மேலும், கடந்த மாதம் வருமான வரி பிடித்தல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக அரசு ஊழியர்கள் புகார் எழுப்பிய நிலையில் தற்போது சம்பளம் வரவு வைப்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அரசு ஊழியர்களை வஞ்சிப்பதாக புகார் எழுப்பி வருகின்றனர்.அரசு ஊழியர்கள் கூறியதாவது: ஏப்., மாதம் வருமான வரி பிடித்தம் செய்வதில் குளறுபடி ஏற்பட்டது. இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கங்கள் தங்களுடைய கருத்தை அரசிடம் தெரிவித்ததால் பட்டியல் தயாரிக்க ஏதுவாக சில தளர்ச்சி செய்யப்பட்டது. இந்நிலையில், அன்றே பட்டியல் தயார் செய்து அன்றே கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படும் என்ற குறிக்கோளுடன் களஞ்சியம் செயலி கொண்டுவரப்பட்டது. ஆனால், மாதத்தின் கடைசி நாள் முடிந்து நேற்று மாலை வரை வங்கிக் கணக்கில் சம்பளம் வரவு வைக்கப்படவில்லை. வருமான வரி கழித்தலுக்கு ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டும் வரவு வைக்கப்பட்டுள்ளது. மற்றவர்களுக்கு வரவு வைக்கப்படவில்லை. இதனால் களஞ்சியம் செயலி வழியாக அரசு ஊழியர்கள் வஞ்சிக்கப்படுகிறார்களோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.