| ADDED : மார் 25, 2024 06:47 AM
இளையான்குடி : தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலுக்கு நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர்.தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருடம் தோறும் பங்குனி பொங்கல் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இந்த விழாவின்போது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தீச்சட்டி, கரும்பு தொட்டில், ஆயிரங்கண் பானை, முடி காணிக்கை செலுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களை நிறைவேற்றி ஆடு, கோழிகளை பலியிட்டு செல்வர்.இந்தாண்டிற்கான திருவிழா மார்ச் 28ம் தேதி இரவு 10:30 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான பங்குனி பொங்கல் விழா வரும் ஏப்.4ம் தேதி நடைபெற உள்ளது.இந்நிலையில் பங்குனி பிறந்தது முதல் ஏராளமான பக்தர்கள் தயமங்கலத்திற்கு வந்த வண்ணம் உள்ளனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வாகனங்களில் தாயமங்கலத்திற்கு மானாமதுரை வழியாக சென்றனர்.இதனால் மானாமதுரை தேவர் சிலை பகுதியில் காலை முதல் மாலை வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்கு படுத்தினர். நேற்று மதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர்,திண்டுக்கல், சிவகங்கை,காரைக்குடி,பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வெங்கடேசன், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்