| ADDED : மார் 14, 2024 11:43 PM
திருப்புவனம் : திருப்புவனம் அருகே லாடனேந்தல் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்றும் பணி மீண்டும் எதிர்ப்பு காரணமாக நிறுத்தப்பட்டது.86 ஏக்கர் பரப்பளவுள்ள லாடனேந்தல் கண்மாயை நம்பி இரண்டாயிரம் ஏக்கரில் விவசாயம் நடந்தது. 40 ஆண்டுகளுக்கு முன் சிலர் கண்மாயின் உட்புறத்தில் விவசாயம் செய்ய தொடங்கினர். தொடர்ந்து படிப்படியாக பலரும் கண்மாயில் விவசாயம் செய்தனர். இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் சிலர் ஆக்கிரமிப்பிற்கு எதிராக போராட சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையிலும் வழக்கு தொடர்ந்தனர். கோர்ட் ஆக்கிரமிப்புகளை அகற்றி கண்மாயை பயன்பாட்டிற்கு கொண்டு வர உத்தரவிட்டது. கடந்த 11ம் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்ற போது ஆக்கிரமிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தப்பட்டது. நேற்று காலை மானாமதுரை டி.எஸ்.பி., கண்ணன, இன்ஸ்பெக்டர் சிவக்குமார், தாசில்தார் விஜயகுமார், பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் மோகன்குமார் மற்றும் 50க்கும் மேற்பட்ட போலீசார் ஆக்கிரமிப்பு அகற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் நீதிமன்றத்தில் தடையாணை பெற உள்ளதாக எதிர்ப்பு தெரிவித்தனர்.பொதுப்பணித்துறையினர் கூறுகையில்: 86 ஏக்கர் பரப்பளவுள்ள கண்மாயின் பெருமளவு பகுதியை ஆக்கிரமித்துள்ளனர். தென்னை மரங்கள் மட்டுமே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவைகள் உள்ளன. பலமுறை அகற்ற வலியுறுத்தியும் கண்டு கொள்ளவில்லை. 11ம் தேதி அகற்ற சென்ற போது எதிர்ப்பு தெரிவித்ததுடன் நேற்று போலீஸ் பாதுகாப்புடன் அகற்ற சென்றோம். ஆக்கிரமிப்பாளர்கள் மீண்டும் தடையாணை பெற நீதிமன்றம் சென்றனர். ஆனால் நீதிமன்றம் 21 நாட்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது, என்றனர்.