| ADDED : டிச 01, 2025 06:45 AM
மானாமதுரை: மானாமதுரையில் டூவீலரில் வந்த வாலிபரை கீழே தள்ளிவிட்டு அவர் அணிந்திருந்த 2 கிராம் மோதிரம் மற்றும் அலைபேசியை பறித்து, கூகுள் பே ரகசிய எண்ணை கேட்டு 4 பேர் தாக்கியதில், காயமுற்ற தயாபுரம் கருணாகரன் 22, காயத்துடன் மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மானாமதுரை தயாபுரத்தை சேர்ந்த பெரியண்ணன் மகன் கருணாகரன் 22. இவர் நேற்று மாலை 6:00 மணிக்கு தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே உள்ள வைகை ஆற்று மேம்பாலம் அருகே டூவீலரில் சென்றுள்ளார். எதிரே ஒரு டூவீலரில் வந்த 4 பேர், கருணாகரன் வந்த டூவீலரை தள்ளிவிட்டதில், பள்ளத்தில் விழுந்தார். அப்போது 4 பேர்களும் அவர் அணிந்திருந்த 2 கிராம் தங்க மோதிரம், அலைபேசியை பறிமுதல் செய்ததோடு, அவரது கூகுள் பே வங்கி ரகசிய எண்ணையும் கேட்டுவிட்டு தப்பினர். சிப்காட் போலீசார் கருணாகரனை மீட்டு, மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.