| ADDED : ஆக 17, 2024 01:26 AM
கம்பம் : மேகமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட பகுதிகளில் வனக் குற்றங்களை தடுக்கவும், வனங்கள் பரப்பு, மரங்களின் அடர்த்தி, வன உயிரின நடமாட்டங்களை கண்காணிக்க வனப் பணியாளர்களுக்கு ட்ரோன் வழங்க வேண்டும்.அனைத்து துறைகளிலும் தொழில் நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி, துறைகளின் மேம்பாட்டிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 'ட்ரோன்' பயன்பாடு பல துறைகளிலும் அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் வனத்துறையில் ட்ரோன் பயன்பாட்டை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மேகமலை புலிகள் காப்பக பகுதியில் வன உயிரின வேட்டையை தடுத்தல், குற்றவாளிகளை அடையாளம் காணுதல், வனப்பரப்பை மதிப்பீடு செய்வது, புதிய நோய்கள் பரவுதல், தாவரங்களில் ஏதேனும் மாற்றம் உள்ளதா என்பன உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக'ட்ரோன் 'பயிற்சி வனத்துறையினருக்கு கடத்த மே மாதம் வழங்கப்பட்டது. கம்பம் கிழக்கு சரகத்திற்குப்பட்ட வனப்பகுதிகளில் - நேற்று 'ட்ரோன்' தொழில்நுட்பர்கள், வனப் பணியாளர்களுக்கு பயிற்சியளித்தனர். வனப் பணியாளர்கள் 'ட்ரோன்' இயக்குவது தொடர்பான பயிற்சி பெற்றனர். ஆனால் ஏற்கனவே பயிற்சி பெற்று 3 மாதங்களை கடந்தும் ட்ரோன் வழங்கப்படவில்லை. குறிப்பாக புலிகள் காப்பக பகுதிகளில் உள்ள அதிகாரிகளுக்கு 'ட்ரோன்' வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.