தேனி: சுவரில் ஓட்டியுள்ள மின்கம்பத்தால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. கூடுதல் பெண்கள் கழிப்பறை இல்லாததால் பாதுகாப்பற்ற சூழலில் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்தும் அவல நிலை உள்ளாகவும், சீரமைக்கப்படாத கழிவுநீர் சாக்கடைகளால் சுகாதாரக்கேட்டில் தவிப்பதாக வீரபாண்டி பேரூராட்சி 15 வது வார்டு ஊர்க்காவல் கோயில் சுவாமி கோயில் தெரு, அதன் குறுக்குத்தெரு குடியிருப்போர் குமுறுகின்றனர்.இவ்வார்டு பகுதியில் ஊர்க்காவல் கோயில் மெயின் தெரு, அதன் 5 குறுக்குத் தெருக்கள், படித்துறை ரோடு தெரு உள்ளன. இப்பகுதியில் 1180 குடும்பத்தினர் வசிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் அடிப்படை வசதிகள் செய்து தராததால் சிரமம் அடைவதாக இப்பகுதி மக்கள் குமுறி வருகின்றனர். இங்கு வசிக்கும் கருப்பையா, நிரஞ்சன், தனபால், அர்ஜூனன், பி.கருப்பையா ஆகியோர் கூறியதாவது: கூடுதல் மகளிர் கழிப்பறைகள் அவசியம்
படித்துறை ரோட்டில் மகளிர் கழிப்பறை உள்ளது. தெருவின் முகப்பில் உள்ள மின்மோட்டாருடன் உள்ள சிறிய தொட்டி மூலம், கழிப்பறைக்கு தண்ணீர் வசதி செய்து பயன்படுத்தப்படுகிறது. தற்போது சேதமடைந்த தொட்டி சீரமைக்கும் பணிகளை பேரூராட்சி நிர்வாகம் செய்து வருகிறது. தற்போதுள்ள கழிப்பிடம் பற்றாக்குறையாக உள்ளதால் படித்துறை அருகே உள்ள இடத்திலோ அல்லது மகளிர் கழிப்பறைக்கு அருகே உள்ள காலி இடத்திலாவது பேரூராட்சி நிர்வாகம் கூடுதல் கழிப்பறை கட்டித்தர வேண்டும். 2வது குறுக்குத்தெரு உள்ளிட்ட சில குறுக்குத் தெருக்களில் பேவர்பிளாக் கற்கள் அமைக்கப்பட்டது.ஒரு சில இடங்களில் கற்கள் பெயர்ந்து போக்குவரத்திற்கு இடையூறாக உள்ளது. அதனை பேரூராட்சி சீரமைக்க வேண்டும். விபத்து அபாயம்
ஊர்க்காவல் மெயின் தெருவில் ஒரு வீட்டின் சுவரோடு சுவராக மின்கம்பம் அமைந்துள்ளது. இதுகுறித்து அவ்வீட்டின் உரிமையாளர்கள் மின்சாரத்துறை, பேரூராட்சி நிர்வாகத்தில் புகார் அளித்தும் மின்கம்பத்தை வேறு இடத்தில் மாற்ற வில்லை. இதனால் விபத்து அபாயம் உள்ளது. அசம்பாவிதம் ஏற்படும் முன், மின்வாரியம் மின்கம்பத்தை வேறு இடத்திற்கு மாற்றியமைக்க வேண்டும். இதே வார்டில் கான்கிரீட் கம்பிகள் வெளியில் தெரியும் அளவிற்கு சேதமடைந்த 5 மின்கம்பங்களால் விபத்து அபாயத்தில் உள்ளன. கொசு மருந்து தெளித்து சென்றாலும் கொசு தொந்தரவு ஓய்ந்தபாடில்லை. கொசுக்கடியால் பலரும் காய்ச்சல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால்கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க பேரூராட்சி துாய்மை பணியை தீவிரப்படுத்திட வேண்டும்., என்றனர்.