திருவள்ளூர்:தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், ஆணையத்தின் விதிமுறையை மீறி, கட்சி பாகுபாடின்றி அரசியல் கட்சியினர் கொடிகளுடன் கார்களில் உலா வருகின்றனர்.தமிழகத்தில் ஏப்., 19ல் லோக்சபா தேர்தல் நடக்கிறது. தேர்தல் நன்னடத்தை விதியை அமல்படுத்திய தேர்தல் ஆணையம், ஓட்டுப்பதிவு நிறைவடையும் வரை, பொது இடங்களில், அரசியல் கட்சி சின்னம், வாகனங்களில் கொடி உள்ளிட்டவற்றை விளம்பரப்படுத்த தடை விதித்துள்ளது.திருவள்ளூர் லோக்சபா தொகுதியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள ஊரக, பேரூராட்சி மற்றும் நகராட்சி ஊழியர்கள் மற்றும் வருவாய் துறையினர், தேர்தல் ஆணைய உத்தரவை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், பிரபலமான முக்கிய கட்சியினர், தங்களது கார்களில் தங்களின் கட்சி கொடியை அகற்றாமல், உலா வருகின்றனர்.திருவள்ளூரில், 'இண்டியா' கூட்டணி சார்பில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில், தி.மு.க., - ம.தி.மு.க., - காங்., உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் சொகுசு கார்களில் வந்திருந்தனர். இந்த கார்களில், சிலர், தங்களது அரசியல் கட்சி கொடி அகற்றாமல் இருந்தனர்.தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், உளவு துறையினர், விதிமீறல் குறித்து, 'மொபைல்போனில்' படம் எடுத்து பதிவு செய்து வருகின்றனர்.