| ADDED : பிப் 29, 2024 10:06 PM
பொன்னேரி:பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பொதுமக்களை, இளைஞர்கள் சிலர் கத்திகளுடன் அச்சுறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.அதில், இருசக்கர வாகனத்தில் செல்வோரை மடக்கி, அவர்களின் சட்டையை பிடித்து கத்தியை காட்டி மிரட்டியும், தரையில் தேய்த்து அச்சுறுத்தும் காட்சிகள் பதிவாகி இருந்தன.கடந்த சில நாட்களாக தடம்பெரும்பாக்கம், சிங்கிலிமேடு, ஆமூர், வடக்குப்பட்டு செல்லும் சாலைகளில் இரவு நேரங்களில் தனியாக செல்வோரை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி சிறு சிறு வழிப்பறி சம்பவங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது.பணம், பொருட்களை இழந்தவர்கள், சிறிய தொகைக்கு காவல் நிலையம் சென்றால், அங்குள்ளவர்கள் தங்களை தேவையின்றி அலைக்கழிப்பர் என எண்ணி புகார் கொடுக்கவும் தயங்குகின்றனர்.இது குறித்த தகவல் பொன்னேரி போலீசாரின் கவனத்திற்கு வந்தது. போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் மற்றும் சிங்கிலிமேடு பகுதிகளைச் சேர்ந்த மூவர் மேற்கண்ட சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது.இதையடுத்து நேற்று தடப்பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை கெல்லீசில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்; மற்ற இருவரை தேடி வருகின்றனர்.