| ADDED : ஏப் 27, 2024 12:14 AM
உடுமலை:கடும் வெயில் தாக்கம் காரணமாகஉடுமலை பகுதியில்மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் வரும், 29ம் தேதி வரை வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களில் ஆரஞ்ச் மற்றும் 'ரெட் அலர்ட்' விடுக்கும் வகையில் வெயில் நடப்பாண்டு மிகவும் அதிகரித்துள்ளது.உடுமலை உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்,103 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. சாலைகளில் வெயில் அனலாக தகித்ததால், எந்நேரமும் பரபரப்பாக காணப்படும் நகரின் பல்வேறு முக்கிய ரோடுகளில் கூட மக்கள் நடமாட்டம் சற்று குறைவாக காணப்பட்டது.தொழில், வேலை, வியாபாரம் உட்பட பல காரணங்களுக்காக வெளியே சென்று வருவோர் வேறு வழியின்றி வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்கள் வழக்கமான பணிகளில் ஈடுபட்டனர். நகரின் பிரதான ரோடுகளில் பல இடங்களில் கானல் நீர் தென்பட்டது.வாகன போக்குவரத்தும் கூட குறைந்தது. ரோட்டில் நடமாடிய மக்களும் வெயில் கடுமை காரணமாக நீர் மோர் பந்தல், இளநீர், நுங்கு விற்பனைக் கடை, பழரசக்கடை, தர்பூசணி, பதநீர் என தாகம் தணிக்க பல்வேறு இடங்களில் தஞ்சம் புகுந்தனர்.ஆண்கள் தலையில் தொப்பி, துண்டுகளை அணிந்தபடியும், பெண்கள் துப்பட்டா, சேலை முந்தானையால் தலையை மூடிக் கொண்டும், குடைபிடித்தவாறும் மக்கள் வெயிலிலிருந்துதங்களை தற்காத்துக் கொண்டு கடந்து சென்றனர். இன்னும் எவ்வளவு நாளுக்கு இந்த வெயிலின்கொ(க)டுமையை தாக்குப்பிடிப்பது எனத் தெரியவில்லை என மக்கள் புலம்பித்தவித்தனர்.