உடுமலை:உடுமலை, திருமூர்த்திமலையில், ஆடிப்பெருக்கு தினமாக நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலையில், மலைமேல் பஞ்சலிங்கம் அருவி, மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.ஆடிப்பெருக்கு தினமான நேற்று, பல்வேறு மாவட்டங்களிலிருந்து பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வந்து, பஞ்சலிங்கம் அருவியில் நீராடி, மும்மூர்த்திகளை வழிபட்டனர்.மேலும், கன்னிமார் அம்மன் கோவிலில், நவதானியங்கள், புத்தாடைகள் வைத்து, பெண்கள் வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டதோடு, நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.திருமூர்த்திமலைக்கு, ஆடி, தை அமாவாசை தினங்களில், விவசாயிகள் மாட்டு வண்டிகள், குதிரை வண்டிகளில் வந்து, வேளாண், கால்நடை வளம் செழிக்க வேண்டி, மும்மூர்த்திகளை வணங்கி செல்வதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர்.ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை தினங்கள் அடுத்தடுத்த நாட்களில் வருவதால், பல்வேறு பகுதிகளிலிருந்து விவசாயிகள் மாட்டுவண்டிகளில் திருமூர்த்திமலையை நோக்கி அணிவகுத்து வந்தனர். ஆடி அமாவாசை தினமான இன்று, ஆற்றங்கரையில் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.