உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள 607 குடும்பங்களுக்கு, புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்களுக்கு, குடிமைப்பொருள் ஆர்.ஐ., மற்றும் தாசில்தார் அங்கீகாரம் வழங்காமலும், அங்கீகாரம் வழங்கிய விண்ணப்பங்களுக்கும், புதிய கார்டு அச்சிடப்படவில்லை.பயனாளிகள் தேர்வு முடிந்து, செப்டம்பர் மாதம் முதலே, மகளிர் உரிமைத்தொகை, வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அங்கீகரிக்கப்பட்டோருக்கு ரேஷன் கார்டு அச்சிட்டு வழங்க உணவு வழங்கல் துறை உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியுள்ள 607 பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. அவிநாசி தாலுகாவில், 42, தாராபுரம் - 36, காங்கயம் - 34, மடத்துக்குளம் - 9, பல்லடம் - 137, திருப்பூர் வடக்கு - 86, தெற்கு தாலுகா - 186, உடுமலை -- 63, ஊத்துக்குளி - 14 என 607 பேருக்கு புதிய ரேஷன் கார்டு செயல்படுத்தப்பட்டதற்கான எஸ்.எம்.எஸ்., அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட வழங்கல் பிரிவில், புதிய ரேஷன் கார்டு அச்சிடும் பணி துவங்கியுள்ளது. அச்சிடும்பணி முடிந்து விரைவில், அந்தந்த வட்ட வழங்கல் அலுவலகங்களுக்கு கார்டுகள் அனுப்பிவைக்கப்பட உள்ளன. மொபைலில் எஸ்.எம்.எஸ்., கிடைக்கப்பெற்றோர், அதனை ரேஷன் கடையில் காண்பித்து பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என வழங்கல் பிரிவினர் தெரிவித்தனர்.