| ADDED : நவ 25, 2025 06:51 AM
திருப்பூர்: திருப்பூர் ராக்கியாபாளையம் பிரிவை சேர்ந்தவர் கமலராஜா, 40; பனியன் தொழிலாளி. கடந்த, 2019 ஆக.3ம் தேதி இவரும், இவரது மாமனாரும் மங்கலம் ரோடு தாடிக்காரமுக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றில் சூப் குடிக்க சென்றனர். சூப் விலை குறித்து கமலராஜன் கேட்டார். அதில், ஏற்பட்ட தகராறில், சிலர் கமலராஜனை தாக்கி, ரோட்டோரம் இருந்த சாக்கடை கால்வாயில் தள்ளி அமுக்கினர். அதில், அவர் இறந்தார். கொலை தொடர்பாக, இரு சிறுவர்கள் உட்பட, நான்கு பேரை சென்ட்ரல் போலீசார் கைது செய்தனர். கொலை வழக்கில் இளஞ்சிறார் மீது இறுதி அறிக்கை தாக்கல் செய்து, அரசு தரப்பு சாட்சிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நேற்று திருப்பூர் மாவட்ட இளைஞர் நீதிக்குழும நடுவர் செந்தில்ராஜா, மணிகண்டன், 23 என்பவருக்கு, ஆறு மாதம் திருப்பூர் அரசு மருத்துவமனை அவசர பிரிவில், டாக்டர்கள் சொல்லும் வேலையை செய்ய வேண்டும் என தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். அரசு தரப்பில் வக்கீல் ஹேமா ஆஜரானார். மேலும், இவ்வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட வாலிபர், சமீபத்தில் வீரபாண்டி பிரிவில் உள்ள ஓட்டலில் சிக்கன் பிரைடு ரைஸ் தாமதமாக வழங்கியதாக, ஓட்டலை சூறையாடிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.