திருப்பூர்: திருப்பூர், பூலுவப்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த, குழந்தைகள் தின விழாவில், குழந்தை களை மகிழ்விக்க, ஆசிரியர்கள் பொம்மை வேடமணிந்து பங்கேற்றனர். கடந்த, 14ம் தேதி பள்ளியில் மரக்கன்று நடும் விழா, புகைப்பட கண்காட்சி, குழந்தைகள் தின விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தது. மதிய உணவு இடைவேளையின் போது, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளை, வெளிவளாகத்தில் அமர வைத்த ஆசிரியர்கள். 'இன்னைக்கு குழந்தைகள் தினம்; உங்களுக்கு ஒரு 'சர்ப்ரைஸ்' தர போகிறோம். நம்ம ஸ்கூலுக்கு டெடிபியர், மிக்கிமவுஸ் வேடமணிந்த பொம்மை வர போகுது. உங்களுடன் விளையாட போகிறது,' என கூறினர். குழந்தைகள் உற்சாகமாக துள்ளி குதித்தனர்; மூன்று பொம்மை வேடமணிந்த நபர்கள் வந்தனர். குழந்தைகளுடன் ஆடி, பாடி மகிழ்ந்து, பொம்மைகளுடன் கைகுலுக்கி மகிழ்ந்தனர். மொபைல் போனில் பாடல்கள் ஒலிபரப்ப, அதற்கேற்றவாறு பொம்மைகளும், குழந்தைகளும் ஆடினர். ஒரு கட்டத்தில் பொம்மையாக வந்தவர்கள் மைக்கில் பேசி, ஒவ்வொரு வகுப்பிலும், ஒரு குழந்தை பெயரை சொல்லி, அவர்களுக்கு கை கொடுத்தனர். எப்படி நம்ம பெயரு எல்லாம் தெரியுது என குழந்தைகள் ஆவலுடன் எதிர்பார்க்க, பொம்மை வேடமணிந்தவர்கள் தங்கள் முகமூடிகளை கழற்றினர். பள்ளியின் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்கள் ரிச்சர்ட், மணிகண்ட பிரபு, ராஜேஷ்குமார் மூவரும் குழந்தைகளை குதுாகலிக்க, பொம்மை வேடமணிந்து வந்தது தெரிந்தது. ஆசிரியர்கள் கட்டித்தழுவிய குழந்தைகள் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.