உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் /  மரங்கள் நிறைந்த பசுஞ்சோலையாய் எஸ்.அம்மாபட்டி அரசு பள்ளி

 மரங்கள் நிறைந்த பசுஞ்சோலையாய் எஸ்.அம்மாபட்டி அரசு பள்ளி

இ யந்திரத்தனமான இன்றைய அறிவியல் உலகில் நவீன குளிர்சாதன வசதிகள் இருந்தாலும் மரங்கள் தரும் இயற்கை நிழலே மனித சமுதாயம் விரும்பும் இடமாக திகழ்கிறது. மரங்களின் நிழல்களில் இளைப்பாறுவதற்கே மனித மனங்கள் விரும்புகிறது. அதனால் தான் நமது முன்னோர் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு நட்டு வளர்த்த மரக்கன்றுகள் எல்லாம் இன்று மரங்களாகி நமக்கு நிழலையும், மனதிற்கு மகிழ்ச்சியையும் தருகிறது. பசுமையும், குளுமையும் மனதை சமப்படுத்தும் சூழலில் கல்வி கற்பது மாணவ சமுதாயம் விரும்பும் ஒன்றாகும். ஸ்ரீவில்லிபுத்துாரில் நீதிமன்ற வளாகம், தாலுகா போலீஸ் ஸ்டேஷன் உட்பட பல அரசு அலுவலகங்கள் மரங்கள் நிறைந்த பசுஞ்சோலையாக திகழ்கிறது. அந்த வரிசையில் வத்திராயிருப்பு தாலுகா எஸ்.அம்மாபட்டி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம் மரங்கள் நிறைந்த பசுமைச் சோலையாக விளங்குகிறது. 1925ல் துவக்கப் பள்ளியாக உருவாகி, 1945ல் நடுநிலைப்பள்ளி, 2006ல் உயர்நிலைப்பள்ளி, 2010ல் மேல்நிலைப்பள்ளி என உயர்ந்து தற்போது 100 ஆண்டுகள் நிறைவு செய்து 101 ஆம் ஆண்டில் இப்பள்ளி அடியெடுத்து வைக்கிறது. நடுநிலைப் பள்ளியாக இருந்தபோது இங்கு படித்த முன்னாள் மாணவரும், ஓய்வு பெற்ற தமிழக போலீஸ் டி.ஜி.பி.யுமான ராதாகிருஷ்ணன் தனது மேல்நிலைபள்ளி படிப்பிற்காக 6 கி. மீட்டர் தொலைவிற்கு அப்பால் உள்ள மங்கலம் கிராமத்திற்கு நடந்து சென்று படித்தார். அப்போது தான் பட்ட கஷ்டங்களை மனதில் உணர்ந்து எதிர்கால மாணவ சமுதாயம் இத்தகைய சிரமம் இல்லாமல் கல்வி கற்க வசதியாக தனது குடும்பத்திற்கு சொந்தமான 3.40 ஏக்கர் நிலத்தை அரசுக்கு வழங்கி மேல்நிலைப் பள்ளியை உருவாக்குவதில் பெரும் பங்களிப்பை செய்தார். மேலும் பள்ளி வளாகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பசுமை வளாகமாக மாற்றம் செய்தார். இதற்கு அப்பள்ளியில் பணியாற்றிய தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும், ஊழியர்களும், மாணவர்களும் உதவிகரமாக விளங்கினர். இதனால் இன்று இப்பள்ளி வளாகம், மரங்கள் நிறைந்த பசுமைச் சோலையாக திகழ்கிறது. தற்போது இப்பள்ளியில் அம்மாபட்டியை சுற்றியுள்ள களத்தூர், நாகலாபுரம், பாறைப்பட்டி, லட்சுமி நாராயணபுரம், கிருஷ்ணாபுரம், சொக்கலாம்பட்டி, லட்சுமிபுரம், வடுகப்பட்டி, அழகாபுரி, அயன் கரிசல்குளம், கோவிந்தநல்லூர், மூவரை வென்றான், நத்தம்பட்டி, கட்டையதேவன்பட்டி என 20க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது இப்பள்ளியில் மேல்நிலைப் படிப்பு படித்து வருகின்றனர். மரங்கள் நிறைந்த பசுமைச் சோலையாய் திகழும் இந்த பள்ளி வளாகத்தை அவ்வழியாக பயணிக்கும் வெளியூர் மக்களும் பார்த்து வியக்கும் அளவிற்கு திகழ்கிறது. இதே போல் ஒவ்வொரு நகரங்களிலும் உள்ள அரசு பள்ளிகள் மரங்கள் நிறைந்த பசுமைச் சோலையாக உருவாகும்போது மாசில்லா நகரங்களும், மாசில்லா கிராமங்களும் உருவாக்குவதில் மாணவர்களின் பங்களிப்பு இயற்கையாகவே அமைந்துவிடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை