உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நிகர்நிலை பல்கலைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு தடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

 நிகர்நிலை பல்கலைகள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு தடுக்க வேண்டும்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை : 'கட்டண நிர்ணயக்குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே நிகர்நிலை பல்கலைகள் வசூலிப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் , 'கேர்' எனும் நிகர்நிலை பல்கலையில், 2014 முதல் 2019 வரையிலான கல்வியாண்டுகளில் படித்த மாணவ - மாணவியரில் சிலர், ஒரு சில பாடங்களில் தோல்வி அடைந்தனர். அவர்களுக்கான சிறப்பு வகுப்புகளுக்கு, ஒரு பாடத்துக்கு 2 லட்சம் ரூபாய், தேர்வு கட்டணமாக 35,000 ரூபாய் செலுத்த வேண்டும் என, பல்கலை நிர்வாகம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. இதை எதிர்த்து, சரத்குமரன் உட்பட, 20க்கும் அதிகமான மருத்துவ மாணவர்கள், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தன. அப்போது, மாணவ - மாணவியர் தரப்பில், மூத்த வழக்கறிஞர் டி.கவுதமன், வழக்கறிஞர் ஆர்.சுவர்ணவேல் ஆஜராகி, 'கட்டண நிர்ணய குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை தவிர, கூடுதலாக கட்டணம் வசூலிக்க முடியாது; இது, பல்கலை அதிகார வரம்புக்கு உட்பட்டது அல்ல' என்றனர். பல்கலை தரப்பில், 'தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கு, கூடுதல் வகுப்புகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என, மாணவ - மாணவியருக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது' என, தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கூடுதல் வகுப்பு நடத்து வது கட்டாயம் அல்ல என்ற போது, அதற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற கேள்வியே எழவில்லை. எனவே, மாணவ - மாணவியரிடம், கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. சான்றிதழ்களை இரண்டு வாரங்களில் திரும்ப ஒப்படைக்க வேண்டும். கட்டண நிர்ணய குழு நிர்ணயித்த கட்டணத்தை மட்டுமே, தமிழகத்தில் உள்ள அனைத்து நிகர்நிலை பல்கலைகளும் வசூலிப்பதை, தமிழக அரசும், பல்கலை மானிய குழு மற்றும் தேசிய மருத்துவ கமிஷனும் உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை