சென்னை : அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், 'அ.தி.மு.க., கொடி, சின்னம், பெயர், லெட்டர் பேடு ஆகியவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும். வழக்கு விசாரணை முடியும் வரை, இடைக்கால தடை விதிக்க வேண்டும்' என்று கோரியிருந்தார்.மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், கட்சி பெயர், கொடி, சின்னம் பயன்படுத்த முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வத்துக்கு, இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து, பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபிக் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்தது.இதையடுத்து, பிரதான மனு நீதிபதி சதீஷ்குமார் முன், விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும், மூத்த வழக்கறிஞர்களின் வாதங்களுக்கு பின், வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல், நீதிபதி சதீஷ்குமார் தள்ளி வைத்திருந்தார். இவ்வழக்கில், நேற்று பிற்பகலில் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். நீதிபதி பிறப்பித்த உத்தரவில், 'அ.தி.மு.க., பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேடு ஆகியவற்றை பன்னீர்செல்வம் பயன்படுத்தக்கூடாது. இதுதொடர்பாக, மனுதாரரான பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் ஏற்கப்படுகின்றன' என்று கூறியுள்ளார்.