விலைமதிப்பற்ற வாழ்க்கை
பிச்சைக்காரன் ஒருவன் வழியில் வைரத்தை கண்டெடுத்தான். அதன் மதிப்பு தெரியாததால் அதை தன்னுடன் இருந்த கழுதையின் காதில் மாட்டிவிட்டான். அதை கண்காணித்துக் கொண்டிருந்த ஒரு வைர வியாபாரி அவனிடம், ”இந்த கல்லை எனக்குக் கொடுத்தால் நான் உனக்கு பணம் தருகிறேன். எவ்வளவு வேண்டும் கேள்” என்றான்.உடனே பிச்சைக்காரனும், “அப்படியானால் ஒரு பத்து ரூபாய் தந்துவிட்டு இந்தக்கல்லை வைத்துக்கொள்” என்றான்.அதற்கு அந்த வைர வியாபாரி இன்னும் குறைவாக வாங்கும் எண்ணத்துடன், ”பத்து ரூபாய் அதிகம்! நான் உனக்கு ஐந்து ரூபாய் தருகிறேன்' என்றான்.பிச்சைக்காரன், 'அப்படியானால் பரவாயில்லை அது இந்த கழுதையின் காதிலே இருக்கட்டும்” என்று சொல்லி நடந்தான். வைர வியாபாரி எப்படியும் அவன் தன்னிடம் அதை ஐந்து ரூபாய்க்கு தந்துவிடுவான் என்ற எண்ணத்துடன் காத்திருந்தான்.அதற்குள் அங்கு வந்த இன்னொரு வியாபாரி அந்த பிச்சைக்காரனிடம் 1000 ரூபாய் கொடுத்து அந்த வைரத்தை வாங்கிக் கொண்டான்.இதை சிறிதும் எதிர்பாராத முதல் வைர வியாபாரி அதிர்ச்சியுடன், “அட அடிமுட்டாளே! கோடி ரூபாய் மதிப்புள்ள வைரத்தை வெறும் ஆயிரத்திற்கு கொடுத்துவிட்டு இவ்வளவு சந்தோஷமா! நன்றாக ஏமாந்துவிட்டாய்“ என்றான்.அதைகேட்ட பிச்சைக்காரன், “யார் முட்டாள்..? எனக்கு அதன் மதிப்புத் தெரியாது. அதனால் அதை இந்த விலைக்கு விற்றுவிட்டேன். மேலும் எனக்கு இது மிகப் பெரிய தொகை எனவே நான் மிகுந்த மகிழ்வுடன் இருக்கிறேன், அதன் மதிப்புத் தெரிந்தும் வெறும் ஐந்து ரூபாய்க்காக அதை இழந்துவிட்டாய். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என சொல்லி நடக்க ஆரம்பித்தார். இப்படித்தான் பலரும் சிறிய சந்தோஷங்களுக்காக விலைமதிப்பற்ற வாழ்க்கையை இழந்து விடுகிறார்கள்.