| ADDED : நவ 26, 2025 07:48 AM
புதுச்சேரி: ஏனாமில் பா.ஜ., ஆதரவோடு ஏனாம் மீண்டும் போட்டியிடுவேன் என சுயேச்சை எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் அறிவித்துள்ளார். ஏனாம் சுயேச்சை எம்.எல்.ஏ., கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் பா.ஜ.,வுக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். வரும் சட்டசபை தேர்தலில் அவர் பா.ஜ., ஆதரவுடன் போட்டியிடவில்லை என என சமூக வளைதளங்களில் தகவல் பரவி வருகிறது. அதனை மறுத்துள்ள கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த தேர்தலில் சுயேச்சையாக வெற்றி பெற்றது முதல் தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறேன். சமீபகாலமாக சில தீய குணம் கொண்ட அரசியல்வாதிகள் தவறான பிரசாரத்தை ஏனாம் மக்களிடம் சமூகவலைதளங்கள், ஊடகம் மூலம் பரப்பி வருகின்றனர்.இதை வன்மையாக கண்டிக்கிறேன். ஏனாம் மக்களின் விருப்பப்படி, எதிர்காலத்தில் மட்டுமல்ல, வரும் தேர்தல்களிலும் பா.ஜ., ஆதரவோடு போட்டியிடுவேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு சீட்டு
ஏனாம் தொகுதியில் தொடர்ந்து 5 முறை போட்டியிட்டு வெற்றி பெற்ற மல்லாடிகிருஷ்ணாராவ் இந்த முறை தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அவர் ஏனாம் தொகுதியில் பல்வேறு பணிகளையும் செய்து வருகிறார்.கடந்த சட்டசபை தேர்தலில் அவர் முதல்வர் ரங்கசாமிக்காக தொகுதியை விட்டு கொடுத்தார்.ரங்கசாமி ஏனாமில் தோல்வியை தழுவினாலும் மல்லாடிகிருஷ்ணாராவுக்காக மீண்டும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கொல்லப்பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் எம்.எல்.ஏ., பா.ஜ., ஆதரவுடன் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜ., கூட்டணி தொடரும்பட்சத்தில் ஏனாம் தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் என்ஆர்.காங்., பா.ஜ, கூட்டணியில் குழப்பம் உருவாக்கியுள்ளது.