| ADDED : மே 01, 2024 01:13 AM
சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஆரவல்லி நகர் பகுதியில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.கிராம மக்களுக்கு குடிநீர் கிணற்றில் இருந்து மின் மோட்டார் வாயிலாக மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, பின் குழாய்களில் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.அம்பிகா நகர் மற்றும் தொழுப்பேடு சாலையில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 15வது நிதிக்குழு மானியத்தின் கீழ், 9 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய மேல்நிலைத் நீர் தேக்கத் தொட்டி கட்டப்பட்டது.முறையாக குழாய் இணைப்புகள் ஏற்படுத்தப்படாததால், கடந்த 2 ஆண்டுகளாக மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி செயல்படாமல் காட்சிப் பொருளாகவே உள்ளது.இதுகுறித்து, பல முறை அதிகாரிகளிடம் முறையிட்டும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.கோடை காலம் துவங்கி உள்ள நிலையில், அம்பிகா நகர் மற்றும் தொழுப்பேடு சாலையில் வசிக்கும், 150 குடும்பங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, குழாய் இணைப்புகள் ஏற்படுத்தி, புதிய மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.