| ADDED : ஆக 07, 2024 12:29 AM
அச்சிறுபாக்கம்:திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த அமுடூர் கிராமத்தைச் சேர்ந்த யுவராஜ் மனைவி நந்தினி, 24. கணவன், மனைவி இருவரும், நேற்று முன்தினம், ஹீரோ ப்ளஸர் ஸ்கூட்டி இருசக்கர வாகனத்தில், மேல்மருவத்துாரில் இருந்து அச்சிறுபாக்கம் நோக்கி சென்றனர்.அச்சிறுபாக்கம், சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் உணவகம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஒரத்தி நோக்கி சென்ற தனியார் பேருந்து, இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியது.இதில், நிலை தடுமாறிய தம்பதி இருவரும் கீழே விழுந்துள்ளனர். விபத்து குறித்து அருகில் இருந்தோர் அச்சிறுபாக்கம் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.அதன்படி, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் வாயிலாக, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள், நந்தினி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பலத்த காயங்களுடன், யுவராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தனியார் பேருந்து ஓட்டுனரான, பொன்விளைந்தகளத்துார் பகுதியைச் சேர்ந்த நாகப்பன், 45, என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.