விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, பெங்களூரு, திருப்பதி உட்பட பிற மாநிலங்களுக்கும், சென்னை உட்பட பல்வேறு பெரு நகரங்களுக்கும் பஸ் வசதி உள்ளது. விருத்தாசலம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை 1 மற்றும் 2ல் இருந்து குக்கிராமங்களுக்கும், பல்வேறு மாவட்டங்களுக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. கல்வி, மருத்துவம், வியாபாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஆயிரக்கணக்கானோர் பயனடைகின்றனர்.இந்நிலையில், பஸ் நிலைய வளாகத்தையொட்டி, தனியார் மருத்துவமனை, குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வந்தன. அதில், ராட்சத வடிகால் செல்லும் நீர்நிலை புறம்போக்கில் இருந்த ஆக்கிரமிப்புகள், கடந்த ஓராண்டுக்கு முன் பொது நல வழக்கின்பேரில், சென்னை ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து இடித்து அகற்றப்பட்டன. தற்போது, அந்த பகுதி முழுவதும் கட்டட கழிவுகள் மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளது. கழிவுநீரும் தேங்கியுள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதால், பஸ்சுக்கு காத்திருக்கும் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றர்.மேலும் கட்டட கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதன் வழியாக, ஆலடி சாலையில் உள்ள ஆயிரக்கணக்கான குடியிருப்புகளுக்கு பொதுமக்கள் சென்று வருகின்றனர். ஆனால், பஸ் நிலையம் வெளியே உள்ள டாஸ்மாக் கடைகள், தனியார் பாரில் இருந்து மதுவாங்கி வரும் பயணிகள், சமூக விரோதிகள் குவிந்து கிடக்கும் கட்டட கழிவுகளின் மறைவிடத்தில் அமர்ந்து மது அருந்துகின்றனர். போதை தலைக்கேறிய நபர்கள், பாட்டில்களை உடைத்து வீசிச் செல்கின்றனர்.அதுபோல், அவ்வழியே செல்லும் பயணிகள், வேலை முடிந்து செல்லும் பெண்களிடம் போதை ஆசாமிகள் அத்துமீறும் அசம்பாவிதங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனை தட்டிக்கேட்கும் நபர்களை தாக்குவது, ஆபாசமாக திட்டுவதும் தொடர்கிறது. இதனால் பயணிகள், பெண்கள் இவ்வழியை தவிர்த்து 1 கி.மீ., சுற்றி செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.எனவே, பஸ் நிலையம் அருகே சமூக விரோதிகள் கூடாரமாக மாறியுள்ள கட்டட கழிவுகளை அகற்றி, பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வருவாய் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏரி துார்வாரப்படுமா
இதேபோல் சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி, கடலுார் சாலையில் உள்ள ஆர்.டி.ஓ., அலுவலகம் எதிரே ஏரியை ஆக்கிரமித்திருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், வணிக வளாகங்களை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். ஆனால், கட்டட கழிவுகளை அகற்றி, அப்பகுதியை துார்வாரி மீண்டும் ஏரியாக மாற்றாமல் கம்பிவேலி மட்டும் அமைத்தனர். இதனால் அப்பகுதி டிஜிட்டல் விளம்பர பேனர் கட்டும் வளாகமாக மாறியுள்ளது. எனவே, ஆக்கிரமிப்பு அகற்றிய பகுதியை துார்வாரி, ஏரியாக மாற்றினால் நிலத்தடி நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது.