| ADDED : ஆக 12, 2024 06:46 AM
சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இருந்து திருப்பூர் வழியாக தேனிக்கு, சத்தி பணிமனைக்கு உட்பட்ட ஒரு அரசு பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ் பண்ணாரி, ராஜன்நகர். பசுவபாளையம், கொத்தமங்கலம், பவானிசாகர், பனையம்பள்ளி கிராமங்கள் வழியாக புளியம்பட்டி செல்கிறது. பஸ்சில் தினமும் இந்த கிராமங்களை சேர்ந்த, 5௦க்கும் மேற்பட்டோர், 15 ஆண்டுகளாக திருப்பூர் பனியன் கம்பெனிகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில் அரசு பஸ்சுக்கு, பண்ணாரி கோவிலில் நேற்று பூஜை செய்து, கிடா வெட்டி வழிபட்டனர். முன்னதாக பஸ்சுக்கு மாலை அணிவித்து, வாழைமரம் கட்டி, உள்பகுதியில் பலுான் கட்டி அசத்தினர். அவ்வழியாக சென்ற பலர், இதுகுறித்த விபரம் கேட்டறிந்து, ஆச்சர்யம் அடைந்தனர். தினசரி வாழ்க்கையில் வழக்கமாகி விட்டதும், பயணத்துக்கு வழித்துணையாக அமையும் எதுவும் வழிபடத்தக்க ஒன்று தானே? நம் முன்னோர்கள் இயற்கையை கடவுளாக வழிபட்டு வாழ்ந்தது தானே இதற்கெல்லாம் முன்னோடி.