கரூர், மாயனுார் கதவணையில் இருந்து, ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் நீர் திறக்கப்பட்டுள்ளதால், கரூரில் அகண்ட காவிரி ஆறு பகுதி, கடல்போல் காட்சியளிக்கிறது.கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 71 ஆயிரத்து, 604 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, ஒரு லட்சத்து, 28 ஆயிரத்து, 6 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்தது. காவிரி ஆற்றில், ஒரு லட்சத்து, 66 ஆயிரத்து, 86 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 920 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.அகண்ட காவிரியில் தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது காவிரி ஆறு கடல் போல் காட்சியளிக்கிறது. கரூர் மாவட்ட எல்லையான, தவிட்டுப்பாளையம் காவிரியாற்று பகுதிகளுக்கு, பொதுமக்கள் செல்வதை தடுக்க வருவாய்த் துறை சார்பில் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.அமராவதி அணைதிருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,558 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 2,338 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. பாசன வாய்க்கால்களில், 460 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 88.29 அடியாக இருந்தது. கரூர் அருகே, பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு வினாடிக்கு, 3,130 கன அடி தண்ணீர் வந்தது.நங்காஞ்சி அணைதிண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு, வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால், நேற்று காலை நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 21.19 அடியாக இருந்தது.ஆத்துப்பாளையம் அணைகரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே கார்வாழி, ஆத்துப்பாளையம் அணைக்கு நீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 20 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறக்கவில்லை.