சின்னமனூர்: சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் படுக்கை, டாக்டர்கள் நியமிக்க மக்கள் நல்வாழ்வுத் துறை நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சின்னமனூர் மருத்துவமனையில் 54 படுக்கைகள் கொண்ட வார்டுகள், ஒரு ஆப்பரேசன் தியேட்டர் உள்ளது. பிரசவங்கள் மாதத்திற்கு ஒற்றை இலக்கத்தில் கூட நடப்பதில்லை. இதற்கு காரணம் தேவையான எண்ணிக்கையில் டாக்டர்கள் இல்லை. அறுவை சிகிச்சைகளுக்கு டாக்டர்களை வெளியில் இருந்து அழைத்து கொள்கின்றனர்.இம் மருத்துவமனையை நம்பி சின்னமனூர் மட்டுமின்றி ஒடைப்பட்டி, வெள்ளையம்மாள்புரம், தென்பழநி, காமாட்சிபுரம், சுக்காங்கல்பட்டி, கன்னிசேர்வை பட்டி, அப்பிபட்டி, முத்துலாபுரம், சீப்பாலக்கோட்டை, முத்துலாபுரம், எரசை, வேப்பம்பட்டி, சீலையம்பட்டி, மார்க்கையன்கோட்டை, குச்சனூர், அய்யம்பட்டி, புலி குத்தி, சிந்தலச்சேரி என கிராமங்களின் பட்டியல் நீள்கிறது. இது தவிர ஹைவேவிஸ் மலையில் உள்ள மகாராஜா மெட்டு, இரவங்கலாறு, மணலாறு, வெண்ணியாறு பகுதிகளில் வசிப்பவர்களும் இங்கு தான் வர வேண்டும்.பல ஆயிரம் மக்கள் பயன்பெறும் அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள் இல்லை. பிரசவம் நடப்பது இல்லை. நவீன லேப் வசதி இல்லை. படுக்கை வசதிகள் மிக குறைவு என இல்லை என்கின்ற பட்டியல் நீள்கிறது. மருத்துவ அலுவலர் நீதி மன்னன் இருப்பதை வைத்து சமாளித்து வருகிறார். இருந்த போதும் பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையான படுக்கை வசதிகளை அதிகரித்து, கூடுதல் டாக்டர்களை நியமித்து சின்னமனூர் மருத்துவமனையை சீரமைக்க மக்கள் நல்வாழ்வுத் துறை முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.