சென்னை:முட்டுக்காடு வேம்படி விநாயகர் மற்றும் அம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அணுகுபாதை அமைக்க, மூன்று ஆண்டுகள் குத்தகைக்கு விட, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்துள்ளது.இது தொடர்பாக, ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர், காஞ்சிபுரம் இணை கமிஷனருக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் தாலுகா, முட்டுக்காடு வேம்படி விநாயகர், வேம்படி அம்மன் கோவிலுக்கு சொந்தமான, 8.15 ஏக்கர் நிலம் உள்ளது.இதில், 1,755 ச.மீ., நிலத்தை, அணுகுபாதை அமைக்க, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்திற்கு, 2022 ஏப்., 1 முதல் மூன்று ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட, கோவில் செயல் அலுவலருக்கு அனுமதி வழங்க, தங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.குத்தகை காலம் மூன்று ஆண்டுகள். மாத வாடகை 53,000 ரூபாயை, ஒவ்வொரு மாதமும் 5 ம் தேதிக்குள் கோவிலுக்கு செலுத்த வேண்டும்.நிலத்தில் கட்டுமானம் செய்யப்படும்போது, கோவிலின் வழியே உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து, அனுமதி பெறப்பட வேண்டும்.நிலம் எந்த நோக்கத்திற்கு கேட்கப்படுகிறதோ, அதற்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். குத்தகை காலம் முடிந்ததும், அதில் உள்ள கட்டுமானங்களுடன், நிலத்தை கோவில் வசம் ஒப்படைக்க வேண்டும்.குத்தகை நீட்டிப்பு தேவை என்றால், மூன்று ஆண்டுகள் முடிவடைவதற்கு முன்னரே, விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.