| ADDED : டிச 13, 2025 05:09 AM
சூலூர்: கண்ணம்பாளையம் நாகையன் தோட்ட சாலை பகுதியில், தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட, 20 சென்ட் நிலம் அதிரடியாக மீட்கப்பட்டது. சூலூர் அடுத்த கண்ணம்பாளையம் நாகையன் தோட்ட சாலை பகுதியில் பாலு கார்டன், லட்சுமி நகர் உள்ளிட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ரோட்டை ஒட்டி இருந்த நீர் வழிப்பாதை மற்றும் ரோட்டின் ஒரு பகுதி, தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனால், ரோட்டில் மழை நீர் தேங்கி நடக்க கூடாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அப்பகுதி பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். வருவாய்த்துறையிடம் ஆக்கிரமிப்பை அகற்றித்தர, பல முறை கோரிக்கை விடுத்திருந்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாததால், சில நாட்களுக்கு முன், கருப்பு கொடி கட்டி, காத்திருப்பு போராட்டம் நடத்தினர். இந்நிலையில், சூலூர் தாசில்தார் செந்தில்குமார் தலைமையில் அங்கு சென்ற வருவாய்த்துறையினர், ஆக்கிரமிக்கப்பட்ட, 20 சென்ட் இடத்தை மீட்டனர். அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.