| ADDED : ஏப் 18, 2024 05:11 AM
திருவாடானை: திருவாடானையில் தேரோடும் வீதியில் பூமிக்கடியில் மின்கம்பி புதைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தினர்.திருவாடானையில் ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் உள்ளது. வைகாசி விசாக திருவிழாவின் போது ஆதிரெத்தினேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், சிநேகவல்லி அம்மன் மற்றொரு தேரிலும் வலம் வருவார்கள். ஆடியில் நடைபெறும் ஆடிப்பூரத் திருவிழாவின் போது சிநேகவல்லி அம்மன் தேரோட்டம் நடைபெறும். இந்த தேர்கள் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய நான்கு தெருக்கள் வழியாக செல்லும். தேர்கள் புறப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன் நான்கு தெருக்களிலும் மின் கம்பங்கள் வழியாக குறுக்கே செல்லும் மின்கம்பிகளை ஊழியர்கள் அவிழ்த்து விடுவார்கள். தேர்கள் நிலைக்கு சென்றவுடன் மின்கம்பிகள் மீண்டும் சரிசெய்யப்படும். இதனால் பல மணி நேரம் மின்தடை ஏற்படுவதால் பூமிக்கடியில் மின்கம்பிகளை புதைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தபட்டுள்ளது.மக்கள் கூறுகையில், தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் தேரோடும் வீதிகளில் பூமிக்கடியில் மின்கம்பிகள் புதைக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் பாதுகாப்பான திட்டமாக உள்ளது. வைகாசி விசாக திருவிழா துவங்க இருப்பதால் தேரோடும் வீதியில் இத்திட்டத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.