உடுமலை;குடியிருப்பில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால், தளிஞ்சி மலை கிராம மக்கள் வேதனையில் உள்ளனர்.ஆனைமலை புலிகள் காப்பகம், அமராவதி வனசரகத்துக்குட்பட்டது தளிஞ்சி மலைவாழ் குடியிருப்பு. இக்குடியிருப்பில், 150க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இரு மலைகளுக்கு இடையிலுள்ள, சமவெளியில் வீடுகள் கட்டி, விவசாயத்திலும் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதியில், ரேஷன் கடை வசதியில்லாததால், சின்னாறு செக்போஸ்ட் பகுதிக்கு, ரேஷன் பொருட்களை வாங்க, வாரத்தில் ஒரு நாள் தளிஞ்சி கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.சின்னாறுக்கு வர, கரடு முரடான, பாறைகள் நிறைந்த, 6 கி.மீ., அடர்ந்த வனப்பகுதியிலுள்ள மண் பாதையில் பயணிக்க வேண்டும். வழித்தடத்தில், கூட்டாறு குறுக்கிடுகிறது. ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. மழை காலங்களில், ஆற்றை கடக்க முடியாத நிலை உள்ளது.இதனால், ரேஷன் பொருட்களை வாங்க, பல கி.மீ., துாரம் நடந்து வந்து, கூட்டாற்றை கடக்க முடியாமல், குடியிருப்புக்கு திரும்பி செல்ல வேண்டியுள்ளது. இல்லாவிட்டால், கேரளா வனத்துறை கட்டுப்பாட்டிலுள்ள, சம்பக்காடு சென்று, அங்கிருந்து பஸ் பிடித்து சின்னாறு ரேஷன் கடைக்கு செல்ல வேண்டியுள்ளது.பல்வேறு இடையூறுகளை சந்திக்க வேண்டியிருப்பதால், ரேஷன் பொருட்களை பெற முடியாமல், தளிஞ்சி கிராம மக்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், விளக்கு எரிக்க எண்ணெய் இல்லாமல் இருளில் அவதிப்படுகின்றனர். சமவெளிப்பகுதிக்கு சென்று அதிக விலைக்கு எண்ணெய், அரிசி வாங்கி வரும் நிலை உள்ளது.வனப்பகுதியில், பாரம்பரியமாக வசிக்கும் தங்களுக்கு, பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், மலைவாழ் மக்கள் வேதனையில் உள்ளனர்.