| ADDED : மார் 18, 2024 01:10 AM
சென்னை:ஈஞ்சம்பாக்கம், அக்கரை பகுதியில் ஸ்ரீரடி சாய் மந்திர் என்ற சாய்பாபா கோவில் உள்ளது. தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இந்த கோவில் அருகே எட்டு மாதங்களாக, 'ரெஸ்டோ' மதுக்கூடம் செயல்படுகிறது.தினமும், இரவில் அதிக இசையுடன், ஆடல், பாடலுடன் மதுக்கூடம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் இரவு அதிக சத்தமாக இருந்தால், பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.இது தொடர்பாக, நீலாங்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார், நடன நிகழ்ச்சியை தடுத்து நிறுத்தினர்.இது குறித்து, போலீசார் கூறியதாவது:இடத்தின் உரிமையாளர், விளையாட்டு கிளப் அமைக்க அனுமதி அளித்து இடத்தை வாடகைக்கு விட்டுள்ளார்.இதை மறைத்து, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு, டாஸ்மாக் நிறுவனத்திடம் அனுமதி பெற்று, மதுக்கூடம் நடத்தி வந்துள்ளனர். அருகில் கோவில் இருப்பதால், மதுக்கூடம் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என, டாஸ்மாக் நிறுவனத்தை வலியுறுத்தி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.