உடுமலை:உடுமலையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், 1,640 பேர் நேற்று தேர்வு எழுதினர்.ஊராட்சி, நகரம் உட்பட அனைத்து பகுதிகளிலும், 15 வயதுக்கு மேற்பட்ட கல்வியறிவு இல்லாதவர்களுக்கு, அவர்களின் இடத்துக்கு சென்று அடிப்படை கல்வியறிவு அளிப்பதற்காக, புதிய பாரத எழுத்தறிவு எனப்படும் வயது வந்தோருக்கான கல்வியறிவு திட்டம் நடக்கிறது.ஒவ்வொரு பகுதியிலும், திட்டத்தை செயல்படுத்த பொதுவான கற்போர் மையம் துவக்கப்பட்டு, கல்வி கற்றுத்தர தன்னார்வலர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.இத்திட்டத்தின் கீழ் நேற்று கற்போருக்கான தேர்வு, பொதுத்தேர்வு பாணியில் நடந்தது. உடுமலையில், 109 மையங்களில், 1,640 பேர் தேர்வு எழுதினர். நேற்று காலை, 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தேர்வு நடந்தது.தேர்வில் வாசித்தல், 50 மதிப்பெண்ணுக்கும், எழுதுதல், 50, மற்றும் கணிதம், 50 என மொத்தமாக, 150 மதிப்பெண்களுக்கு வினாக்கள் கேட்கப்பட்டன.பள்ளி தலைமையாசிரியர்கள் முதன்மை கண்காணிப்பாளர்களாகவும், ஆசிரியர் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் தேர்வறை கண்காணிப்பாளர்களாகவும் செயல்பட்டனர்.வினாத்தாள், தேர்வு நாளான நேற்று காலை பிரிக்கப்பட்டு தேர்வர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தலைமையாசிரியர்கள் வினியோகித்தனர். வட்டார கல்வி அலுவலர்கள் ஆறுமுகம், சரவணன், மனோகரன் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.